முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: விசாரணையை ஏப்ரல் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பா.ஜ.க தலைவர்கள் அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி, அப்போதைய உ.பி.முதல்வர் கல்யாண் சிங் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் வரும் ஏப்ரல் மாதம் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

மேல்முறையீடு

இவர்கள் கூட்டு சதி செய்ததாக சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. ஏற்கெனவே இந்த வழக்கில் ரேபரேலி நீதிமன்றம் 13 பேரை விடுவித்திருந்தது. இந்தத் தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றமும் 2010-ல் உறுதி செய்தது. ஆனாலும் அத்வானி உள்ளிட்டோரை விடுவித்ததை எதிர்த்து மஹ்பூப் அகமது (தற்பொது இவர் உயிருடன் இல்லை) என்பவரும் சிபிஐ-யும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி.கோஸ் மற்றும் ரோஹிண்டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அத்வானியின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், கேரளா சர்ச்சில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட சர்ச்சை வழக்கில் தான் அவசரமாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

ஏப்ரல் 6-ம் தேதி  விசாரணை

இதனையடுத்து நீதிபதிகள், “எனவே, நாங்கள் விசாரணையை ஒத்தி வைக்கிறோம்” என்றனர். மேலும் ஏப்ரல் 6-ம் தேதி அடுத்த விசாரணை நடைபெறுவதற்குள் சி.பி.ஐ மற்றும் வாதிகள் தங்கள் தரப்பினை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நீதிபதிகளின் கேள்விகள்

மார்ச் 6-ம் தேதி இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது நீதிபதி நாரிமன், “இந்த வழக்கில் ஏதோ ஒன்று விசித்திரமாக உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட விதத்தை நாங்கள் முதற்கண் ஏற்கவில்லை. மேலும் ஏன் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் இன்னும் செய்யவில்லை? சட்ட நடைமுறைகளின் படி இவ்வாறு விடுவிப்பு செய்ய முடியாது” என்றார். அப்போது அத்வானி வழக்கறிஞர் வேணுகோபால் தன் தரப்பு வாதங்களை முன்வைத்து இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட 186 சாட்சியங்களையும் மீண்டும் அழைக்க முடியுமா என்றார்.

நாரிமன் ஆஜர்

ஆனால் நீதிபதிகள் அவர் வாதத்தை ஏற்காமல் மார்ச் 22ம் தேதிக்கு தள்ளி வைத்தனர், ஆனால் நீதிபதி நாரிமன் நேற்றுதான் வர முடிந்தது என்பதால் நேற்று 23-ம் தேதி இந்த விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை மீண்டும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்