முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவால் ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது: மக்கள் பாடம் புகட்ட அமீத்ஷா வேண்டுகோள்

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டெல்லியில் கெஜ்ரிவால் ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. அதனால் வரும் மாநகராட்சி தேர்தலில் அவருக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமீ்த்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லி மாநகராட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. டெல்லியில் 3 மாநகராட்சிகள் உள்ளன. டெல்லி வடக்கு, டெல்லி தெற்கு, டெல்லி கிழக்கு ஆகிய 3 மாநகராட்சிகள் உள்ளன. இந்த 3 மாநகராட்சிகளையும் கைப்பற்ற பாரதிய ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அமீத்ஷா உரை:

டெல்லி மாநகராட்சி தேர்தலையொட்டி அங்கு பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களிடையே தலைவர் அமீத்ஷா உரையாற்றினார். அப்போது டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. வரும் மாநகராட்சி தேர்தலில் அந்தக்கட்சிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளில் பாரதிய ஜனதா வெற்றிபெற்று தாமரை சின்னம் பொறித்த காவிக்கொடி பறக்க வேண்டும் என்றார்.

காவிக்கொடி:

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாரதிய ஜனதா வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் பாரதிய ஜனதா வெற்றிபெற்றால் அடுத்த பொதுத்தேர்தலில் டெல்லி மாநிலத்தையும் பாரதிய ஜனதா பிடிக்க எளிதாக இருக்கும் என்றும் அமீத்ஷா கூறினார்.

மேடையில் ஒரு வரைபடத்தை அமீத்ஷா காட்டி அதில் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள மாநகராட்சி தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று  ஆட்சியில்  இருக்கிறது. டெல்லி மற்றும் ஒரு சில மாநிலங்களில் மட்டும் மாநகராட்சிகளில்  பாரதிய ஜனதா ஆட்சி இல்லை என்றார். மீதமுள்ள மாநிலங்களிலும் பாரதிய ஜனதா ஆட்சி மலர வேண்டும் என்றார். கடந்த 2014-ம் ஆண்டிற்கு பிறகு பீகார், டெல்லி மற்றும் ஒரு சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் பாரதிய ஜனதா மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற்று வருகிறது. மற்ற இடங்களிலும் பாரதிய ஜனதா வெற்றிபெற வேண்டும். டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கொடி பறக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் மோதல் போக்கை கையாண்டு வருகிறார்.

சமீபகாலத்தில் ஊழல்:

டெல்லியில் மட்டும் ஆட்சிக்கு வந்துள்ள ஆம் ஆத்மி கட்சி அதிக அளவில் ஊழலில் ஈடுபட்டு வருகிறது. கெஜரிவாலின் முதன்மை செயலாளர்  சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெங்காயம் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்துள்ளது. தெரு விளக்குகள் மற்றும் தண்ணீர் லாரிகள் வாங்குவதிலும் ஊழல் நடந்துள்ளது. ஊழியர்கள் நியமனத்திலும் ஊழல் நடந்துள்ளது. டெல்லி அமைச்சர் ஒருவர் ஹவாலாவில் சிக்கியுள்ளார். குஜராத், கொல்கத்தா மற்றும் இதர மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி விளம்பரத்திற்காக டெல்லி கருவூல பணம் பயன்படுத்தப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சில அமைச்சர்கள்,  எம்.எல்.ஏ.க்கள் ஊழல் மற்றும் கற்பழிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கெஜரிவால் தயாராக இருக்கிறாரா? அல்லது நீதி விசாரணைக்கு உத்தரவிட தயாரா இருக்கிறாரா? என்று கேட்கிறேன் என்று கெஜரிவால் மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்