முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் பேருந்து நிலையத்தில் 2 ஆம் கட்ட தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சர் இரா.காமராஜ் தொடங்கிவைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஏப்ரல் 2017      திருவாரூர்
Image Unavailable

 

திருவாரூர் பேருந்து நிலையத்தில் போலியோ நோயினை ஒழிக்கும் விதமாக 2 ஆம் கட்ட தீவர போலியோ சொட்டு மருந்து முகாமினை குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தொடங்கிவைத்தார். கலெக்டர் (பொறுப்பு) க.சக்திமணி தலைமை வகித்தார்.

துவக்கம்

உணவுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது.....திருவாரூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் 2 ஆம் கட்ட தீவர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 1 லட்சத்து 22 ஆயிரத்து 180 குழந்தைகள் பயனடையவார்கள். சொட்டு மருந்து வழங்க ஊரக பகுதிகளில் 800 முகாம்களும் , நகர்பகுதிகளில் 70 முகாம்களுமாக மொத்தம் 870 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.கடந்த 2.04.2017 அன்று நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 180 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

மேலும் அரசு மருத்துவமனைகள் , ஆரம்ப சுகாதார நிலையங்கள் , துணை சுகாதார நிலையங்கள் , சத்துணவு மையங்கள் ,பள்ளிகள், புகைவண்டி நிலையங்கள் , பேருந்து நிலையங்கள் , கோவில்கள் , வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் நடமாடும் குழுக்கள் மூலம் போக்குவரத்து வசதி இல்லாத இடங்களிலும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முகாம் அன்று பிறந்த குழந்தைகளுக்கும், ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் தற்போது சொட்டு மருந்து தவறாமல் கொடுக்கப்பட வேண்டும்.பணி நிமித்தம் காரணமாக இடம் பெயர்ந்து செல்லும் செங்கல் சூளை தொழிலாளர்கள், கட்டுமானத்தொழிலாளர்கள், சாலைப்பணி தொழிலாளர்கள், கைரேகை பார்ப்பவர்கள், ஆடு, மாடு மற்றும் வாத்து மேய்ப்பவர்கள் , பிற மாநில தொழிலாளர்கள் (பொம்மை செய்பவர்கள், இரும்பு வேலை செய்பவர்கள் போன்றவர்கள்) மக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி அவரவர்கள் பணியிடத்தில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் சுகாதாரம் , ஊட்டச்சத்து , ஊரக வளர்ச்சி, கல்வித்துறை, வருவாய்த்துறை , மாணவர்கள், தன்னார்வலர்கள், ரோட்டரி சங்கத்தினர் ஆகியோர் சொட்டு மருந்து வழங்குபவர்களாகவும் மேற்பார்வையாளர்களாகவும், கண்காணிப்பாளர்களாகவும் பணியாற்ற உள்ளனர். இப்பணியில் மொத்தம் சுமார் 3480 பணியாளர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பணியனை மேற்பார்வையிட ஆரம்ப சுகாதார நிலைய அளவில் 112 மேற்பார்வையாளர்களும், வட்டார அளவில் 10 கண்காணிப்பாளர்களும், மாவட்ட அளவில் 8 மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 130 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி,இணை இயக்குநர் (மருத்துப்பணிகள்) மரு.அசோகன், துணை இயக்குநர் மரு.செந்தில்குமார், கமலாம்பிகா கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.டி.மூர்த்தி, திருவாரூர்; நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் கலியபெருமாள், மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்