முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை : சுப்ரீம் கோர்ட் அதிரடி

செவ்வாய்க்கிழமை, 9 மே 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், நீதிபதி கர்ணன் பிறப்பிக்கும் நீதி உத்தரவுகள், கருத்துகளை பிரசுரம் செய்ய வேண்டாம் என ஊடகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

மனநல பரிசோதனைக்கு மறுத்ததால்..
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மனநல பரிசோதனைக்கு உட்பட கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் மறுத்துவிட்டதாலேயே நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக அவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 4-ம் தேதி நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடந்திருக்க வேண்டும். ஆனால் அன்றைய தினம் அவரை பரிசோதிக்க வந்த மருத்துவக் குழுவிடம், "நான் நலமாக இருக்கிறேன். எனது மனநிலை சரியாக உள்ளது. எனவே, எனக்கு மருத்துவ பரிசோதனை நடத்தத் தேவையில்லை. தலித் நீதிபதியை (என்னை) அவமானப்படுத்தும் வகையிலும் துன்புறுத்தும் வகையிலும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது" என்று கூறி மறுத்துவிட்டார்.

இது முதல் முறை..
அதுமட்டுமல்லாது, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி லோகூர், பினாகி சந்திர கோஷ், குரியன் ஜோசப் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி கர்ணன் நேற்று (திங்கள்கிழமை) உத்தரவு பிறப்பித்திருந்தார். நீதிபதி கர்ணன் வழக்குகளை விசாரிக்கவோ அல்லது நீதிமன்றம் சார்ந்த நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவோ கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில்தான் தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி கர்ணன் உத்தரவைப் பிறப்பித்திருந்தார். இத்தகைய சூழலில்தான், தற்போது அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பதவியில் இருக்கும் நீதிபதி ஒருவரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை பின்னணி:
தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. இதை விசாரித்த 7 நீதிபதிகள் அமர்வு, நேரில் ஆஜராக உத்தரவிட்டும் நீதிபதி கர்ணன் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்தது. அதன்பின் சுப்ரீம் கோர்ட்டில் அவர் ஆஜரானார். எனினும், அதன்பிறகு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 7 பேர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவும், அவர்கள் தனது முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்றும் அடுத்தடுத்து நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார். இந்நிலையில், மே 1-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் உத்தரவிட்டது. ஆனால் கர்ணன் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடத்தி வரும் 8-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்