முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலித், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதலை தடுக்க வேண்டும்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநாட்டில் தீர்மானம்

திங்கட்கிழமை, 15 மே 2017      திருநெல்வேலி
Image Unavailable

இந்தியாவில் தலித், சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடந்து வரும் தாக்குதலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

 மாநாடு

குர்ஆன் காட்டிய வழியை முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி, முகம்மது ரசூலுல்லாஹ் என்ற மாநாடு நெல்லை மேலப்பாளையத்தில்  நடைபெற்றது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாததின் நெல்லை  கிழக்கு மாவட்டக் கிளை சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு அதன் தலைவர் எஸ். சுபைர்அஹம்மது தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் அப்துல்ஜப்பார், பொருளாளர் முகம்மதுமைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநாட்டின் தொடக்கமாக, வரதட்சிணை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நாடகம், என்னைக் கவர்ந்த இஸ்லாம் என்ற தலைப்புகளில் சொற்பொழிவுகள் நடைபெற்றன.

பலர் பங்கேற்பு

இதனைத் தொடர்ந்து நவீன பிரச்னைகளும் நபிகளாரின் தீர்வுகளும் எனும் தலைப்பில் அமைப்பின் தமிழ் மாநிலத் தலைவர் பக்கீர்முஹம்மது அல்தாபி, திருமறை காட்டும் இறைத்தூதர் எனும் தலைப்பில் மாநிலச் செயலர் எம்.எஸ். சுலைமான், இஸ்லாத்தின் ஆதாரம் இறைச் செய்தி மட்டுமே எனும் தலைப்பில் மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் பேசினர். அமைப்பின் மாநிலச் செயலர்கள் எஸ். யூசுப்அலி, கே.ஏ. செய்யதுஅலி, கிழக்கு மாவட்டத் துணைச் செயலர்கள் ஜமால்உஸ்மானி, ஹாரிஸ், சதாத், காசிம், மருத்துவ அணிச் செயலர் மைதீன், தொண்டரணிச் செயலர் முத்துமுஹம்மது, நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் இஸ்லாத்தின் மூல ஆதாரமான குர்ஆனை முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும்.இந்திய அளவில் தலித், சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல் நடத்தப்பட்டு வருவது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.முத்தலாக் விவகாரத்தில் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறி முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.மழைக் காலங்களில் கிடைக்கும் நீரை சேமிக்கும் வகையில் நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும். குளங்கள், அணைகளைத் தூர் வார வேண்டும். புதிதாக தடுப்பணைகள் அமைக்க வேண்டும்.பாளையங்கால்வாயை ஒட்டியுள்ள தார்சாலையை 20 அடி அகலமுள்ள கான்கிரீட் சாலையாக மாற்ற வேண்டும். ஹாமீம்புரம் கன்னிமார்குளத்தை தூர் வார வேண்டும். மேலப்பாளையம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   துணைத் தலைவர் நேஷனல் சாகுல் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்