முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்று தமிழகத்தில் உடனே பத்திரப்பதிவை தொடங்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 20 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் பத்திரப்பதிவுக்கு உள்ள தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், பத்திரப்பதிவை நடத்தாமல் இருப்பது செயலற்ற தன்மையை வெளிப்படுத்தும் செயல் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது,

“தமிழகத்தில் உள்ள விளைநிலங்களைப் பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதனால் கடந்த 8 மாத காலமாக அங்கீகாரம் இல்லாத மனைகளைப் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் இது சம்பந்தமான வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த சூழலில் அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரன்முறைப் படுத்துவது தொடர்பாக புதிய விதிகளை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஐகோர்ட்டு  அனுமதியால்  தடை நீங்கியது

உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் மற்றும் புதிய வீட்டு மனைகள் தொடர்பாக அரசாணைகளை பிறப்பித்து, நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இது தொடர்பான வழக்கு கடந்த வாரம் (12.05.2017) வெள்ளிக்கிழமை அன்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் அரசாணைகளை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் புதிய அரசாணைகளைப் பின்பற்றி, நிபந்தனைகளுக்கு உட்பட்டு பத்திரப்பதிவு செய்யலாம் என அனுமதி அளித்தது. இதன் அடிப்படையில் ஏற்கனவே இருந்த தடை நீங்கியது.

உயர்நீதிமன்ற உத்தரவு வந்து ஒரு வார காலம் ஆகியும் பத்திரப்பதிவு இன்றுவரை நடைபெறவில்லை. இதற்கு காரணம் பத்திரவுப்பதிவு துறையின் மெத்தனப்போக்கு. தங்கள் பிள்ளைகளின் கல்விக்காகவும், திருமணத்திற்காகவும், வியாபாரத்திற்காகவும் பத்திரத்தை வங்கிகளில் வைத்து கடன் பெறவோ, பத்திரத்தை விற்கவோ முடியாத நிலை உள்ளது.

நடுத்தர மக்கள் பாதிப்பு

உயர்நீதிமன்றத்தில் பத்திரப்பதிவு தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த காரணத்தால் வீட்டு மனைகளை விற்கவோ, வாங்கவோ, ரியல் எஸ்டேட் தொழில் செய்யவோ முடியாத நிலையில் பொது மக்கள், குறிப்பாக சாதாரண நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் பத்திரப்பதிவு நடைபெறாமல் இருப்பதால் தமிழக அரசுக்கு அதிக அளவில் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பத்திரப்பதிவுக்கு உள்ள தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்தும் இன்னும் பத்திரப்பதிவு நடைபெறாதது தமிழக அரசின் செயலற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.  தமிழக அரசின் பத்திரப்பதிவு முறையில் இருந்த முரண்பாடான கோட்பாடுகளால் கடந்த சில வருடங்களாக இலட்சக்கணக்கான மனைகளை பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில் தற்போது பத்திரப்பதிவு சம்பந்தமாக தமிழக அரசின் அரசாணைகளில் முறையான, சரியான கோட்பாடுகள் இல்லாத காரணத்தால் மீண்டும் இலட்சக்கணக்கான மனைகளை பத்திரப்பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது.

மக்கள் நலன் காக்க வேண்டும்

இருப்பினும் தற்போதுள்ள தமிழக அரசின் அரசாணையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.  எனவே தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் பத்திரப்பதிவுகள் அனைத்தும் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதற்கு உட்பட்டவை என்பதால் அதற்கேற்ப நடவடிக்கையை உடனடியாக எடுத்து பத்திரப்பதிவு துறையை செயல்படுத்தி அனைத்து தரப்பு மக்கள் நலன் காக்க வேண்டும்” என்று த.மா.கா. வலியுறுத்துவதாக ஜி.கே. வாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்