முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செய்யாறு அருகே வரதட்சணை கேட்டு மனைவிக்கு சித்ரவதை: மருமகன் அடித்துக் கொலை மாமனார் மைத்துனர் கைது

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      திருவண்ணாமலை

 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்த கணவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாமனார் மைத்துனர் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

வரதட்சணை கொடுமை

காஞ்சிபுரம் மாவட்டம் சின்னகாஞ்சிபுரம் தாத்திதோப்பு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள் கணேஷ் (40), திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு சமையலராக வேலை செய்து வந்தார். இவரது முதல் மனைவி குடும்ப பிரச்சனையால் தீவைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதையடுத்து அருள்கணேஷ் 2வதாக தி.மலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள விண்ணவாடி கிராமத்தைச் சேர்ந்த சீதாராமன் மகள் ஞானசுந்தரியை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டாராம். இவர்களுக்கு பார்கவி (4) என்ற மகளும் அஜித்குமார் 2) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனசுந்தரி தங்கைக்கு திருமணம் நடந்தது. அப்போது அதிகளவு வரதட்சணை மற்றும் சீர்வரிசை உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளனர். இதனையறிந்த அருள்கணேஷ் தனது மனைவியிடம் உனது தங்கைக்கு கொடுத்த சீர்வரிசை, வரதட்சணைபோல் நீயும் வாங்கிவா என கூறியுள்ளார். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் ஞானசுந்தரியின் பெற்றோரிடமும் அருள்கணேஷ் கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் வரதட்சணை சம்பந்தமாக தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபித்துக் கொண்டு ஞானசுந்தரி மாலை தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அருள்கணேஷ் மாமியார் வீட்டுக்கு சென்ற மனைவியை அழைத்து வர இரவு 10 மணிக்கு விண்ணவாடிக்கு வந்தார். அப்போது மாமனாரிடம் உனது சிறிய மகளுக்கு சீர்வரிசை செய்ததுபோல் பெரியமகளான எனது மனைவிக்கும் சீர்வரிசை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. தகராறில் அருள்கணேஷ் தான் வைத்திருந்த சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியால் சீதாராமனின் இடதுகையில் கிழித்துள்ளார். வலி தாங்க முடியாமல் சீதாராமன் அருள்கணேஷை கீழே தள்ளியுள்ளார். இதில் அவர் காயமடைந்ததால் தகராறு முற்றியது ஆத்திரமடைந்த சீதாராமன் அவரது மகன் மணிகண்டன் ஆகியோர் அருள்கணேஷை விறகு கட்டையால் சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அருள்கணேஷ் மயங்கிவிழுந்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து அருள்ககணேஷை நள்ளிரவு ஒரு மணியளவில் செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர் அருள்கணேஷ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் கத்தியால் கிழித்ததால் காயமடைந்த சீதாராமனுக்கு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த செய்யாறு காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து அருள்கணேஷின் உறவினர் கல்யாண சுந்தரம் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவ செய்து சீதாராமன் மணிகண்டன் ஆகியோரை நேற்று (வெள்ளிக்கிழமை) காலை கைது செய்தனர். மருமகனை மாமனார் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து