முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்காசியில் ரூ.1.46 கோடி கள்ள ரூபாய் நோட்டுகளுடன் 2 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017      திருநெல்வேலி

தென்காசியில் ரூ.1.46 கோடி கள்ள ரூபாய் நோட்டுகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 புழக்கத்தில் கள்ள நோட்டுகள்

தென்காசியில் கடந்த சில மாதங்களாக மர்ம கும்பலால் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையிலான போலீஸ்காரர்கள் விக்னேஷ், சக்தி ராஜேந்திரன், முத்துமாரி, சண்முகநாதன், சண்முகவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.

போலீசார் ரோந்து

இந்நிலையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார்  சனிக்கிழமை இரவில் தென்காசி பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.1.46 கோடி பறிமுதல்

இதையடுத்து போலீசார் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கைதானவர்கள் சங்கரன்கோவிலை சேர்ந்த அசன்(வயது 61), புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டையை சேர்ந்த சாமிதுரை (49) என்பது தெரியவந்தது.பின்னர் சாமிதுரை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ரூ.2 ஆயிரம், ரூ.500, ரூ.100 மதிப்புடைய ரூ.1 கோடியே 40 லட்சம் கள்ள நோட்டுகள் கட்டுகட்டாக அச்சடித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கள்ளரூபாய் நோட்டுகளையும், அவற்றை அச்சடிக்க பயன்படுத்திய 3 ஜெராக்ஸ் எந்திரங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

இச்சம்பவம் குறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிந்து பிடிபட்ட 2 பேரையும் கைது செய்தனர். அவர்களுடன் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆகவே அவர்களுடன் தொடர்புடையவர்கள் யார் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அவர்கள் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக தெரிகிறது. அவர்கள் எங்கெங்கு புழக்கத்தில் விட்டார்கள்? என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து