முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா குடம் குடமாக பாலாபிஷேகம்

புதன்கிழமை, 7 ஜூன் 2017      மதுரை
Image Unavailable

அழகர்கோவில் -  மதுரை மாவட்டம் அழகர்மலை உச்சியில் உள்ள ஆறாவது படை வீடு சோலைமலை முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்றானது வைகாசி மாதம் நடைபெறும் விசாக திருவிழாவும் ஒன்று. இந்த விழா கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. இதில் தினமும் மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்று நடைபெற்ற வைகாசி விசாக திருவிழாவில் அப்பன் திருப்பதி மற்றும் சுற்று வட்டார கிராம முருக பக்தர்கள் பாதையாத்திரையாக பால்குடம் எடுத்து அலகு குத்தி கோவிலுக்கு வந்தனர்.
மேலும் மேளதாளங்கள் முழங்க அங்குள்ள சஷ்டி மண்டபத்தில் குடம்குடமாக உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், இளநீர், தேன், புஷ்பம் உள்ளிட்ட பதினாறு அபிஷேகங்கள் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு வைர வேலுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மாலையில் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து