குட்டிக்கதை சொல்லி ஒ.பி.எஸ் அணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு
.jpg?itok=uR0Wsg7W)
சென்னை, திருந்தி வந்தால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா போல் மனதார ஏற்றுக்கொள்வோம் என்று ஒ.பி.எஸ் அணியினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு மருத்துவக்கல்லூரி தொடக்கவிழாவில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை வருமாறு:-
ஒரு காட்டில் ஒநாயும், நரியும் நண்பர்கள் அவை இரை ஒன்றும் கிடைக்காமல் அலைந்து திரிந்து கொண்டிருந்தன. மனவிரக்தியில் தனித்து வாழ்ந்து கொண்டிருந்த ஒரு புலியோடு ஓநாயும், நரியும் கூட்டு வைத்துக் கொள்ள தீர்மானித்து பேச்சு வார்த்தை நடத்தியது. மூன்று பேரும் ஒருதாய் மக்களாக ஒற்றுமையாக இருக்க வேண்டும்! எந்த இரை கிடைத்தாலும் அதை பங்கு போட்டு சாப்பிட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டன.
நமக்கு ஒரு வலிமையான தலைவன் கிடைத்துவிட்டான் என்று ஓநாயும், நரியும் ஊளையிட்டு.. ஊளையிட்டு.. தன் மகிழ்ச்சியை காடு முழுவதும் தெரிவித்து வந்தன. ஒரு நாள் புலிக்கு ஓநாய், நரி மீது சந்தேகம் வந்தது.“ஒரு மானை வேட்டையாடினால் அதை எப்படி பங்கு போட்டுக் கொள்வது? என்று கேட்டது. அதற்கு ஓநாய் “புலியே! நீதான் எங்கள் தலைவன், அதனால் மானின் தலை உங்களுக்கு, இந்த நரி, வேகமாக ஓடக்கூடியது. அதனால் மானின் நான்கு கால்களும் இந்த நரிக்கு கொடுக்கலாம். மீதியிருப்பது உடம்புதான். அதை நான் எடுத்துக்கொள்வேன்!” என்றது.
ஓநாயின் சூழ்ச்சியைத் தெரிந்து கொண்ட புலி ஓநாய் தலையில் ஓங்கி அடித்தது. ஓநாய் வலி தாங்காமல் ஊளையிட்டது. நரியே நீ எப்படி பங்கு போடுவாய்!” என்று புலி நரியிடம் கேட்டது. இந்தக் காட்டுக்கே தலைவரான சிங்கத்தை நாட்டாமையாக வைத்து நாம் பிரித்துக் கொள்ளலாம்” என்றது நரி. மூன்று பேரும் சிங்கத்தை அணுகினார்கள் சிங்கம் மூன்றுபேரும் சொல்வதை கேட்டு‚ நாட்டாமைக்கும் ஒரு பாகம் தர வேண்டும். என்ற நிபந்தனையோடு “நீங்கள் வேட்டையாடிய மானை இங்கே கொண்டு வந்து போடுங்கள் நான் பிரித்துக் காட்டுகிறேன்” என்றது.
மற்ற மூன்று பேரும் ஒன்றை ஒன்று பார்த்து திருதிருவென விழித்தபடி “இனிமேல்தான் வேட்டையாட வேண்டும் என்று கூறின. கிடைக்காத ஒன்றுக்காக இத்தனை போராட்டமா? ஆரவாரமா?‚ புலியே! இந்த விலங்குகளின் நயவஞ்சக பேச்சைக் கேட்டு நீ உன் இனத்தை விட்டு பிரிந்து வந்தது தப்பு, உடனே உன் இனத்தோடு சேர்ந்து விடு. நாட்டாமையே தீர்ப்பு சொன்ன பிறகு புலி பதுங்குவதும், தயங்குவதும் ஏன் என்று தெரியவில்லை. அம்மா உலகமே வியக்கும் அளவிற்கு நிர்வாகத்திறமை உடையவர்.கனிவையும் கண்டிப்பையும் இரு கண்களாகக் கொண்டவர்கள்.
தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் மனதார ஏற்றுக் கொள்வார். அம்மா எப்படியோ, அதுபோல் அம்மாவின் பிள்ளைகளாகிய நாங்களும் நடந்து கொள்வோம். தமிழ்நாட்டில் அம்மாவின் பொற்கால ஆட்சி நிரந்தரமாக நடைபெற அவர்களுடைய பிள்ளைகளாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஆட்சிக்கு துணையாகவும், தூணாகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.