முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் கூர்கா ஜன்முக்தி மோர்ச்சாவுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : வன்முறையை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று தனிமாநிலம் கோரி போராட்டம் நடத்தி வரும் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்புவிடுத்துள்ளார்.

மேற்குவாங்காளத்தை இரண்டாக பிரித்து தனிகூர்க்கா மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரி கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறி வருகிறது. போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இதை போலீசார் மறுத்து உள்ளனர். போராட்டம் மேலும் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் வன்முறையை கைவிட்டு பிரச்சினைக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். எந்த பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். வன்முறையில் இறங்குவது பிரச்சினைக்கு தீர்வுகாண உதவாது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அமைதியாக இருக்கும்படியும் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைத்து தரப்பினர்களும் தனி மாநிலம் கோருபவர்களும் சேர்ந்து பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வுகாண பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் பிரச்சினைக்கு வன்முறை மூலம் தீர்வுகாண முடியாது. எந்த பிரச்சினைக்கும் இருதரப்பினர்களும் சேர்ந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியும் என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும். வன்முறையில் யாரும் இறங்கக்கூடாது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேற்குவங்காளத்தில் குறிப்பாக டார்ஜிலிங் பகுதியில் நிலவும் சூழ்நிலை குறித்து மாநில முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ராஜ்நாத் சிங் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார். மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து ராஜ்நாத் சிங்கிடம் மம்தா விபரமாக எடுத்துக்கூறினார்.

டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் வங்கமொழியை கட்டாய பாடமாக வைக்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். தற்போது இந்த போராட்டம் தனி மாநிலத்திற்காக மாறி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து