முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படையினரால் கைது செய்யபட்ட 28 மீனவர்கள் - 138 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் - பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் கடிதம்

சனிக்கிழமை, 24 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : இலங்கை கடற்படையினரால் நேற்று முன்தினம் கைது செய்யபட்ட 8 மீனவர்கள் உள்பட 28 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் 138 படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றும் மீண்டும் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

மீண்டும் கைது

இது குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விதத்தில் இலங்கை அரசின் தீய நடவடிக்கைகள் கண்டு இந்திய மீனவர்கள் சொல்லொண்ணா துயரும், வேதனையும், அச்சமும் அடைந்து இருப்பதை வேதனையோடு தங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன். நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறையிலிருந்து 21-ம் தேதி இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் 23-ம் தேதி அதிகாலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இவர்கள் பாக். ஜலசந்தியில் பாரம்பரிய உரிமை உள்ள இடத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள்.

ஜெயலலிதா வலியுறுத்தல்

மீன்பிடி தடைக்கான 61 நாள் முடிந்ததும் நடுக்கடலில் மீன் பிடிக்கப்போன தமிழக மீனவர்கள் 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 3 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இப்பிரச்சனை குறித்து எங்களது மரியாதைக்குரிய மறைந்த புரட்சித்தலைவி தங்களின் கவனத்துக்கு கொண்டு வந்து, கடிதங்கள் எழுதி அதில் மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணுமாறு வலியுறுத்தி வந்திருக்கிறார். இலங்கை கடற்படையால் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தில் கடத்தப்படுவோம் என்ற பயத்தில் தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழிலை மேற்கொள்ள முடியாமல் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

நிரந்தர தீர்வு ...

இலங்கை கடற்படையின் இந்த ஆத்திரமூட்டும் செய்கைகளால் தமிழ்நாட்டில் மீன சமுகத்தினர் மத்தியில் அதிருப்தியும், அமைதியின்மையும் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இது பற்றி பல சந்தர்ப்பங்களில் திரும்பத் திரும்ப எடுத்துக் கூறி வந்திருக்கும் நிலையிலும் மீனவர்கள் கைது செய்யப்படுவது நிற்கவில்லை. சித்ரவதை செய்யப்படுவதும் முடிவுக்கு வரவில்லை. மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இப்பிரச்சனைக்கு ஓர் நிரந்தர முடிவு காணப்பட வேண்டும்.

தலையிட கோரிக்கை

தற்போது இலங்கை அரசிடம் தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகள் உள்ளன. இந்த படகுகளை பயன்படுத்தாமல் நீண்ட நாட்களாக அப்படியே விட்டுவைத்தால், அவற்றுக்கு மீள முடியாத அளவில் சேதம் ஏற்படுவதோடு ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படும் நிலை வந்துவிடும். எனவே நீங்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டு (நேற்று முன்தினம்) கைது செய்யப்பட்ட  8 மீனவர்கள் உள்ளிட்ட இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 28 தமிழக மீனவர்களையும், அவர்களின் 138 மின்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடவேண்டும். இதில் நீங்களே தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும். இவ்வாறு அந்தக் கடித்தில் அவர் எழுதியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து