முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சை விபத்தில் உயிரிழந்த 10 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சனிக்கிழமை, 15 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தஞ்சை மாவட்டம் வல்லத்தில் அரசு பேருந்து - லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆழ்ந்த இரங்கல்

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் சரகம், ஆலக்குடி மேம்பாலம் அருகே திருச்சியிலிருந்து தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், இரும்பு கம்பி ஏற்றி வந்த சரக்கு மினி லாரியும் மோதிய விபத்தில், பேருந்தில் பயணம் செய்த ஐந்து நபர்கள், மினி லாரி ஓட்டுநர் என ஆறு நபர்கள் சம்பவ இடத்திலேயும், இரண்டு நபர்கள் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலும், இருவர் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பத்து நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிகிச்சைக்கு உத்தரவு

இந்த விபத்தில் 23 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும், அமைச்சர்கள் துரைக்கண்ணு, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

நிதியுதவி அறிவிப்பு

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும்; காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து