முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் அகல ரயில்பாதை திட்ட நிலை: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, தமிழகத்தின் அகல ரயில்பாதை திட்டங்களின் நிலை குறித்து மத்திய ரயில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.

மாநிலங்களவையில் திமுக அவைத்தலைவர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் அவர் இதை தெரிவித்தார்.

இது குறித்து கனிமொழியின் கேள்விக்கு அமைச்சர் பிரபு அளித்த பதில் பின்வருமாறு:

''225 கி.மீ. தொலைவுள்ள திண்டுக்கல் - பொள்ளாச்சி - பாலக்காடு மற்றும் கோயம்பத்தூர் அகல ரயில் பாதை திட்டம் 2006- 2007 ஆண்டு தொடங்கப்பட்டு நிறைவடைந்துள்ளது. பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. 225 கிலோ மீட்டர் தொலைவுள்ள மயிலாடுதுறை - திருவாரூர் - காரைக்குடி - திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பாளையம் அகல ரயில்பாதை திட்டம் 2007-2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது.

90 கி.மீ. தொலைவுள்ள மதுரை - போடி நாயக்கனூர் அகல ரயில்பாதை திட்டம், போதுமான நிதி வசதி இல்லாத காரணத்தால் உரிய நேரத்தில் தொடங்கப்படவில்லை. டிசம்பர் 2016-ல், ரூ.302 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 539 கி.மீ. அகல ரயில் பாதை திட்டமிடப்பட்டு, அதில் 263 கி.மீ. செயல்படுத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. 276 கிலோ மீட்டருக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு ஒதுக்கும் நிதியின் அடிப்படையில்தான் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால், திட்டங்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயம் செய்ய முடியவில்லை.

பழமையான ரயில்பாதைகளை தவிர்த்து மீதம் உள்ள 826.86 கி.மீ. தூரம் உள்ள பாதைகள் அனைத்தையும் அகல ரயில் பாதைகளாக மாற்ற 2017-18 நிதி அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு ரயில்வேயில் உள்ள அனைத்து தடங்களும் அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்டு விட்டன.

இந்தியாவில் உள்ள ரயில்வே பிரிவுகளில், கிழக்கு மத்திய ரயில்வே, வட மேற்கு ரயில்வே, வட கிழக்கு ரயில்வே, தென்னக ரயில்வே, மற்றும் மேற்கு ரயில்வேயில் தற்போது மீட்டர் கேஜ் பாதைகள் உள்ளன. வடக்கு மத்திய ரயில்வே, தென் கிழக்கு ரயில்வே, தென் கிழக்கு மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வேயில் மட்டுமே குறுகிய ரயில்பாதைகள் செயல்பாட்டில் உள்ளன. திட்டங்களை விரைவாக நிறைவேற்ற கீழ்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

2014-15ல் ரூ.58,718 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு 2015-16ல் ரூ.93,795 கோடியாகவும், 2015-16ல் ரூ.1,11,661 கோடியாகவும், 2017-18ல் ரூ.1,31,000 கோடியாகவும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்துள்ளது.
பணிகளுக்கான டெண்டர்கள் வழங்குவது தொடர்பாக, மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இது திட்டங்களுக்கான ஒப்புதலை வழங்குவதை துரிதப்படுத்துகிறது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக கழகம், ரயில்வேயின் முக்கிய திட்டங்களுக்காக 1.5 லட்சம் கோடி கடன் அளிக்க முன் வந்துள்ளது.

மத்திய மாநில அரசுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளோடு தொடர்ந்து ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு, திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்துக்கென்றும், தனியாக ஒரு ரயில்வே அதிகாரி இதற்கென நியமிக்கப்பட்டுள்ளார்.

இது போன்ற முயற்சிகளால் புதிய ரயில்வே பாதைகள், அகல ரயில் பாதைகள் போன்றவற்றை உருவாக்குவதில் வேகம் அதிகரித்தள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் ஒரு நாளைக்கு சராசரியாக 4.1 கி.மீ. ஆக இருந்த புதிய ரயில்பாதைகள் அமைக்கும் பணி, தற்போது ஒரு நாளைக்கு 7.75 கி.மீ. ஆக உயர்ந்துள்ளது. 2016-17-ல், 2855 கி.மீ. புதிய ரயில் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது'' என்று அமைச்சர் விளக்கம் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து