முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் ரூ.13 ஆயிரமாக உயர்வு: தேசியக்கொடி ஏற்றி வைத்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, நாட்டின் 71-வது சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தேசியக்கொடி ஏற்றினார். பின், அவரது உரையில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் ரூ.13 ஆயிரமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

காவல்துறை அணிவகுப்பு

71-வது சுதந்திர தினவிழா சென்னை தலைமைசெயலகம் கோட்டை கொத்தளமருகே நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 8.17 மணிக்கு விழா நடைபெறும் கோட்டை கொத்தளத்திற்கு வந்தார். பின் விழா நடைபெறும் வளாகத்திற்கு வந்தார். அவரை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். அதைத்தொடர்ந்து முப்படைத்தளபதிகள், டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் முதல்வருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பை ஜூப்பில் சென்றபடியே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார்.

கொடியேற்றினார் ...

இதன்பின்னர் கோட்டை கொத்தளத்தில் அமைக்கப்பட்ட விசேஷ மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து கொடி வணக்கம் செலுத்தினார். அப்போது மூவர்ண தேசியக்கொடியை குறிக்கும் வகையில் பலூன்கள் பறக்க விடப்பட்டன. இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுதந்திர தின விழா பேரூரையாற்றினார்.

ஓய்வூதியம் அதிகரிப்பு

இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக தனது இன்னுயிரை துச்சமென மதித்து, உயிர் தியாகம் செய்த தியாக செம்மல்கள் நிறைந்திட்ட மாநிலம் நம் தமிழ்நாடு. வன்முறைகளுக்கு இடம் கொடாமல், அஹிம்சை மூலமே, அடிமை விலங்கை தகர்த்தெறிந்த தியாகச் செம்மல்கள் வலம் வந்த இடம் என்ற பெருமையும் பெற்றது நம் தமிழ்நாடு. நாட்டின் விடுதலை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தங்களின் சொந்த நலன்களைக் சிறிதும் சிந்திக்காமல் நாட்டு விடுதலைக்காகவே தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த அந்த தியாகச் செம்மல்களை சிறப்பிக்கும் வகையில் தற்போது அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 13 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

சிறப்பு ஓய்வூதியம் ...

சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 6 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதையும், விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு, நாட்டிற்காக குறிப்பிடத்தக்க வகையில் சிறப்புற பணியாற்றியவர்களின் தியாகத்தை போற்றும் வகையில், அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு ஓய்வூதியம் 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 6 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதையும், மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாளில் பெற்ற சுதந்திரத்தை பேணி காக்கவும், இந்திய திருநாட்டை வல்லரசாக்கவும், அதில் தமிழ்நாட்டை வளம் மிக்க மாநிலமாக ஆக்கவும் இந்த அரசு தொடர்ந்து செயல்படும் என உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலாம் விருது ...

இதைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரிலான விருது, சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜனுக்கு வழங்கப்பட்டது. அதே துணிவு சாகச செயலுக்கான விருது, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ப்ரீத்தி்க்கு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளில் சேவையாற்றிய சிறந்த ஆளுமைகளுக்கு விருதுகளை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் மக்களவைத் துணைத்தலைவர்  டாக்டர் தம்பிதுரை, சட்டமன்றப் பேரவைத்தலைவர்  தனபால் சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன்,  எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செல்லூர் கே.ராஜூ, எம்.சி.சம்பத், ஆர்.பி. உதயகுமார், பெஞ்சமின், துரைக்கண்ணு, கே.டி.ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர்  கிரிஜா வைத்தியநாதன் ,போலீஸ் டிஜிபி, டி.கே.இராஜேந்திரன், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், பல்வேறு நாட்டுத்தூதர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து