முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன்: ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை - 'போயஸ் கார்டன் இல்லம்' நினைவிடம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வியாழக்கிழமை, 17 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும் அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

விசாரணை ஆணையம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக திறம்பட பணியாற்றி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர், அவர் உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி, கடந்த டிசம்பர் 5 ம்தேதி தன் இன்னுயிரை நீத்தார். பல்வேறு அமைப்புகள் மற்றும் பல தரப்பினரிடமிருந்தும் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தவண்ணம் உள்ளன, விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பித்திட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். அந்த நீதிபதியின் பெயர் பின்னர் வெளியிடப்படும். குறுகிய காலத்தில் விசாரணை அறிக்கை வெளியிடப்படும்.

நினைவிடமாக ...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆறுமுறை திறம்பட பணியாற்றி., தமிழ்நாட்டின் நலனுக்காக தன் இன்னுயிரை ஈந்துள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அல்லும் பகலாக அயராது பாடுபட்ட உன்னத தலைவராய் ஜெயலலிதா அனைவர் மனதிலும் நீக்கமற நிறைந்துள்ளார்.

ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தை நினைவிடமாக்கி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்குமாறு தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்புகளையும் நாட்டிற்கு அவர் செய்த சாதனைகளையும், தியாகங்களையும் பொதுமக்கள் அறியும் வண்ணம் அவர் சிறப்பாக வாழ்ந்த சென்னை போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள வேதா நிலையம் அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அப்பல்லோ வரவேற்பு

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பிற்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த விசாரணையின் மூலம் மருத்துவமனை, ஜெயலலிதாவிற்குச் சிறப்பான சிகிச்சை அளித்ததும் வெளியே வரும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு, மிகச் சிறப்பான மருத்துவ சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்று தெரிவித்துள்ள அப்பல்லோ மருத்துவமனை, அவரது மரணம் குறித்து பேசப்படும் பல்வேறு ஊகங்களுக்கு விசாரணை ஆணையத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து