முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவர்கள் சேவையாற்ற வேண்டும் - முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்

புதன்கிழமை, 13 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : கிராமப்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று சென்னையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 1013 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பி, அரசு மருத்துவ நிலையங்களுக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு தங்கு தடையின்றி மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக, இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென தனியாக மருத்துப்பணியாளர் தேர்வு வாரியம் ஜனவரி 2012-இல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கப்பட்டது. இவ்வாரியம், இதுவரை 9,777 மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள், 9,190 செவிலியர்கள் உட்பட 22,042 பணியாளர்களை தேர்வு செய்துள்ளது.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தற்போது 1013 உதவி மருத்துவர்களை புதியதாக தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:-

மருத்துவ ஆணை பெற்றிருக்கின்ற மருத்துவர்களே, உங்கள் அனைவருக்கும் பணிவான வணக்கத்தை இந்த நேரத்திலே தெரிவித்து, அரசு, இன்றைக்கு சுகாதார துறையிலே சிறந்த சேவையை செய்து கொண்டிருக்கின்றது. இந்தியாவிலேயே, மருத்துவத்துறையில் தமிழகம்தான் முதன்மை வகிக்கின்ற அளவிற்கு சிறப்பான மருத்துவர்களால் சேவையாற்றப்பட்டு வருகின்றது. புதிதாக ஆணை பெற்றிருக்கின்ற மருத்துவர்கள் கிராமப்புறத்திலே சேவை செய்து, கிராமப்புறத்தில் வாழ்கின்ற ஏழை, எளியோருக்கு சிறப்பான முறையிலே சிகிச்சை அளித்து மக்கள் போற்றுகின்ற அளவிற்கு உங்கள் பணி அமைய வேண்டும் என்று வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைஅமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச்செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவப் பணியாளர் தேர்வுவாரிய தலைவர் (பொறுப்பு) மோகன் பியாரே, உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அமுதா, மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின்ஜோ, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் (பொறுப்பு)பானு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் (இ.எஸ்.ஐ.) இன்பசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து