முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன, ரஷ்ய கடற்படைகள் போர் ஒத்திகை: அமெரிக்கா, தென்கொரியாவும் தீவிர பயிற்சி

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

பியாங்கியாங்: கொரிய தீபகற்பம் அருகே சீன, ரஷ்ய கடற்படைகள் நேற்று போர் ஒத்திகையை தொடங்கின. இதேபோல அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து எல்லைப் பகுதியில் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று அமெரிக்கா எச்சரித்து வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவை சாம்பலாக்குவோம், அமெரிக்காவின் குவாம் தீவை ஏவுகணை வீசி அழிப்போம் என்று வடகொரியா மிரட்டல் விடுத்து வருகிறது. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.

சீனாவும் ரஷ்யாவும் ஆரம்பம் முதலே வடகொரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. “அமெரிக்கா மீது வடகொரியா போர் தொடுத்தால் நடுநிலை வகிப்போம். ஒருவேளை வடகொரியா மீது அமெரிக்கா முதலில் போர் தொடுத்தால் அதை தடுப்போம்” என்று சீனா அண்மையில் அறிவித்தது.

இந்தப் பின்னணியில் கொரிய தீபகற்ப பகுதியில் சீன, ரஷ்ய கடற்படை இணைந்து நேற்று போர் ஒத்திகையை தொடங்கின. ஓக்கோட்ஸ் கடல் பகுதியில் நடைபெறும் இந்த போர் ஒத்திகை ஒரு வாரம் நடைபெறும் என்று ரஷ்ய கடற்படை அறிவித்துள்ளது.

இதனிடையே அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து தென்கொரியாவின் எல்லைப் பகுதிகளில் போர் ஒத்திகை நடத்தி வருகின்றன. இதில் அமெரிக்க விமானப் படையின் அணுகுண்டுகளை வீசும் திறன் கொண்ட பி-1பி, எப்-35 போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து