முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ஜி வழக்கில் அக்டோபர் 25-ம் தேதி தீர்ப்பு - டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : 2ஜி வழக்கில் அக்டோபர் 25-ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நேற்று டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்தார்.

தணிக்கை குழு அறிக்கை

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததால் அரசுக்கு ரூ1,76,000 கோடி இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கை குற்றம்சாட்டியது. இதுநாடு முழுவதும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகாலமாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது.

அடுத்த மாதம் தீர்ப்பு

இவ்வழக்கில் ஏப்ரல் மாதம் இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் கடந்த ஜூலையில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு தேதி ஆகஸ்ட் 25-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ஓபி ஷைனி தெரிவித்திருந்தார். ஆனால், செப்டம்பர் 20-ந் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். இத்தகைய நிலையில், நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது. 2ஜி வழக்கில் அக்டோபர் 25-ல் தீர்ப்பு வழங்கப்படும் என்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி ஷைனி அறிவித்தார். தீர்ப்பு வரும் அக்டோபர் 25 ஆம் தேதி வழங்கப்படும். ஒருவேளை அக்டோபர் 25-ல் வழங்க முடியவில்லை என்றால் அடுத்த 2 அல்லது 3 தினங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி ஓபி ஷைனி தெரிவித்தார்.

வழக்கு கடந்து வந்த பாதை

கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் 2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கும் தேதியை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று பிற்பகல் அறிவித்தது. 2ஜி விவகாரத்தில் நடைபெற்ற முக்கிய திருப்பங்கள் வருமாறு.,

1)ஆகஸ்ட் 2007ல் 2ஜி அலைவரிசை ஏல நடைமுறையை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தொடங்கியது.

2) ஏல நடைமுறை சரியானதாக இல்லை எனக் கூறி 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு நிதியமைச்சகம் கடிதம் எழுதியது.

3) 2010-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், ஒட்டுமொத்த ஏல நடைமுறையும் நியாயமற்றதாகவும் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

4) 2ஜி ஏலத்தில் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக 2010 நவம்பர் 10-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

5) இதைத்தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகளால் அமைச்சர் ராசா தன் பதவியை நவம்பர் 14-ம் தேதி ராஜினாமா செய்தார்.

6) 2011 பிப்ரவரி 17-ம் தேதி ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

7) இதைத்தொடர்ந்து ஏப்ரல் 2-ம் தேதி ராசா உள்ளிட்ட 9 பேர் மீது சி.பி.ஐ தனது முதல் குற்றச்சாட்டை பதிவு செய்தது.

8) ஏப்ரல் 25-ம் தேதி தாக்கலான 2வது குற்றப்பத்திரிகையில் கனிமொழி உள்ளிட்ட 4 பேர் பெயர்கள் இடம் பெற்றன.

9) ராசா அமைச்சராக இருந்த போது வழங்கப்பட்ட 122 தொலைத்தொடர்பு உரிமங்களை உச்ச நீதிமன்றம் 2012 பிப்ரவரி 2-ம் தேதி ரத்து செய்தது.

10) மே 15-ம் தேதி ராசா ஜாமீனில் வெளியே வந்தார்.

11) 2014 ஏப்ரலில் 2ஜி ஊழல் வழக்கில் ராசா, கனிமொழி மீது அமலாக்கத்துறையும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

12) சிறப்பு நீதிமன்றத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் 2017 ஏப்ரல் 19-ம் தேதி நிறைவுற்றது.

13) தீர்ப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பின் தேதி நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.

14) இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு அக்டோபர் 25-ம் தேதி அல்லது அதற்கடுத்த 3 தினங்களில் அளிக்கப்படும் என்று நீதிபதி ஓ.பி. ஷைனி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து