Idhayam Matrimony

இன்று ஆஸி.க்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி

சனிக்கிழமை, 23 செப்டம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

இந்தூர் : இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடக்கிறது. இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
முன்னிலை

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டி தொடரில் இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது . சென்னையில் நடந்த முதல் போட்டியில் 26 ரன் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடந்த 2-வது போட்டியில் 50 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

வெற்றி பெறும்...

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடக்கிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனையுடன் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழும் இந்திய அணி இந்த தொடரில் மிகவும் நம்பிக்கையுடன் ஆடி வருகிறது. இலங்கை தொடரில் 9 ஆட்டத்தில் தொடர்ச்சியாக வென்றது. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 போட்டியில் வென்று இருந்தது. இந்த வெற்றியை நீட்டிக்கும் வகையில் இந்திய வீரர்கள் அனைவரும் திறமையுடன் விளையாடுவார்கள். அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படமாட்டாது என்று தெரிகிறது. ஒரு வேளை மனிஷ் பாண்டே நீக்கப்பட்டால் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

ஆஸி.க்கு சவால்

ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது கட்டாயமாகும். இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி திணறி வருகிறது. கேப்டன் சுமித், மேக்ஸ்வெல், பல்க்னெர், ஸ்டோனிஸ் ஆகியோர் மட்டுமே நல்ல நிலையில் உள்ளனர். இந்தியாவின் சுழற்பந்து வீச்சு ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் சவாலாக இருக்கிறது. அதே நேரத்தில் அந்த அணியிலும் சிறந்த சுழற்பந்து வீரர்கள் இல்லை.

126-வது போட்டி

ஆஸ்திரேலிய வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் ஆக்ரோ‌ஷத்தை வெளிப்படுத்துவர்கள். அதேநேரத்தில் இந்திய வீரர்கள் தொடரை வெல்ல போராடுவார்கள். இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தூரில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் போட்டி பாதிக்கப்படுமா? என்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இரு அணிகளும் இன்று மோதுவது 126-வது போட்டியாகும். இதுவரை நடந்த 125 ஆட்டத்தில் இந்தியா 43-ல் ஆஸ்திரேலியா 72-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 போட்டி முடிவு இல்லை.

பகல்-இரவாக நடைபெறும் இன்றைய போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்திய வீரர்கள்:

விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, ராகுல், கேதர்ஜாதவ், ரகானே, டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, மனிஷ்பாண்டே, அக்‌ஷர்பட்டேல், யசுவேந்திர சஹால், பும்ரா, முகமது ‌ஷமி, உமேஷ்யாதவ், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார்.

ஆஸ்திரேலிய வீரர்கள்:

ஸ்டீவன் சுமித் (கேப்டன்), வார்னர், ஆரோன்பிஞ்ச், மேக்ஸ்வெல், டிரெவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்கம் மேத்யூ வாடே, கும்மின்ஸ், நாதன் கோல்ட்டர் நைல், பல்க்னெர், ஸ்டோனிஸ், கானே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஆஸ்டன் அகர், ஹில்டன் கார்ட் ரைட்.

மழை அச்சுறுத்தல்

இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் ஹால்கோர் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்த மைதானம் அதிகமாக ரன் குவிக்க ஏற்றதாக இருக்கும் என்று பிட்ச் பராமரிப்பாளர் சமந்தர் சிங் சவுகான் கூறினார். மேலும் அவர் கூறும்போது, ‘இரண்டு வருடத்துக்குப் பிறகு இந்த மைதானத்தில் சர்வதேசப் போட்டி நடக்கிறது. அப்போது இருந்த பிட்சை விட இப்போது வேறுவிதமாக மாற்றியிருக்கிறோம். இந்தூர் பிட்ச் பவுன்சருக்கு ஏற்றதாக இருக்கும். இப்போதும் அப்படித்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இந்த பிட்ச் சாதகமாக இருக்கும். பேட்ஸ்மேன்களும் இதில் சாதிக்கலாம். அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பிருக்கிறது. இங்கு மழை பெய்து வருவதால் பிட்ச் மூடப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 25-ம் தேதி பிட்ச் உருவாக்கத்தில் ஈடுபட்டோம். பிறகு கடந்த 7-ம் தேதி இரண்டு நாள் உள்ளூர் போட்டி இங்கு நடத்தப்பட்டது. அதில் பிட்ச் சிறப்பாக இருந்ததை அறிந்தோம்’ என்றார். இன்றைய போட்டியில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

ஆரோன் பிஞ்ச் விளையாடுகிறார்

முதல் இரண்டு போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த அரோன் பிஞ்ச் இன்றைய போட்டியில் விளையாடுகிறார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்காக பயிற்சி மேற்கொள்ளும்போது தொடக்க வீரர் ஆரோன் பிஞ்சுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் முதல் மூன்று போட்டிகளில் பிஞ்ச் விளையாடமாட்டார் என்று கூறப்பட்டது. தற்போது காயம் குணமடைந்ததால் இன்று இந்தூரில் நடைபெற இருக்கும் 3-வது ஒருநாள் போட்டியில் பங்கேற்பார் என்று அந்த அணியின் துணை கேப்டன் வார்னர் கூறியுள்ளார்.

இதுகுறித்து வார்னர் கூறுகையில் ‘‘ஆரோன் பிஞ்ச் வலைப்பயிற்சி மேற்கொண்டதை பார்க்கையில் சிறப்பாக இருந்தது. இன்றைய போட்டியில் இடம்பெறுவதற்கான உடற்தகுதிக்கான அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார். அவர் சிறந்த பேட்ஸ்மேன். கடந்த இரண்டு வருடங்களாக ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளார். தொடக்க வீரராக பேட்டிங் செய்யும் வகையில் அதிக அளவில் அனுபவம் பெற்றுள்ளார். மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து