முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுரண்டை அருகே கோவில் விழாவில் வெடி விபத்து :ஒருவர் பலி

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      திருநெல்வேலி

சுரண்டை அருகே கோவில் திருவிழாவின்போது வாணவேடிக்கைக்கு வைத்திருந்த பட்டாசு வெடித்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 6 பேர் காயம் அடைந்தனர்.சுரண்டை அருகே உள்ள கடையாலுருட்டி கிராமத்தில் மாரியம்மன், காளியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில் திருவிழா நடந்துவந்தது. விழாவையொட்டி நேற்று இரவு சப்பர ஊர்வலம் நடந்தது. அப்போது ஊரின் வெளியே பிரதான சாலையில் வாணவேடிக்கை நடைபெற்றது. சுரண்டை வரகுணநாதபுரத்தை சேர்ந்த பார்வையற்ற தொழிலாளி கணபதி (வயது57)என்பவர் வெடிகளை ஏற்பாடு செய்து கொண்டு வந்தார்.இதற்காக அருகில் உள்ள முருகேசன் என்பவரது இரும்பு மற்றும் சிமெண்ட் விற்பனை கடை அருகே வெடிகளை குவித்து வைத்திருந்தார். அதன் அருகே கணபதி அமர்ந்திருந்தார். வாண வேடிக்கையின்போது எதிர்பாராதவிதமாக மேல்நோக்கி சென்ற வெடி பக்கவாட்டில் வெடித்தது. இதில் வெடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த வெடி குவியலில் தீப்பொறி பட்டது. இதனால் அங்கு நின்றவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து வெடிகளும் வெடித்து சிதறின. இதில் வாண வெடி அருகே அமர்ந்திருந்த கணபதியால் ஓடி முடியவில்லை. இதனால் அவர் பட்டாசுகளுக்கிடையே சிக்கி கொண்டார். இதில் கணபதி மீது பட்டாசுகள் வெடித்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார். அவரது உடலில் தீப்பற்றியது.மேலும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 6 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் கணபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் கடையாலுருட்டி முருகன் மகன் ராம்குமார் (17), சாம்பவர் வடகரை சுடலை, சேர்வைகாரன் புதூர் நடராஜன் மகன் சபரி (17) ஆகிய 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்தின்போது முருகேசனின் கடை முற்றிலும் இடிந்து சேதமானது.இந்த விபத்து சம்பவம் குறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான கணபதிக்கு மனைவி, ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன், மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்த சம்பவம் சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து