முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெங்கு காய்ச்சலை தடுக்க 24 மணிநேரமும் கண்காணிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 10 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : டெங்கு காய்ச்சல் குறித்து பொதுச்சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு இயக்குனர் அலுவலகத்தில் 24 மணிநேர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

பொதுமக்கள் காய்ச்சல் கண்டவுடன் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி தகுந்த சிகிச்சையை பெற வேண்டும். மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து கடைகளுக்கு சென்று தாமாகவே மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காய்ச்சல் கண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல் குறைந்த பின்பும் நீர்ச்சத்துக் குறைவு மற்றும் இதர பிரச்சனைகளால் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் காய்ச்சல் நின்ற பின்பும் மூன்று நாட்களுக்கு மிகவும் கவனமாக இருக்கவேண்டும். பசி எடுக்கவில்லை என்றாலோ சோர்வாக இருந்தாலோ மீண்டும் மருத்துவரை அணுக வேண்டும். போதிய நீர் மற்றும் திரவ உணவுகளை அருந்த வேண்டும். தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. உரிய மருந்து சீட்டு இல்லாமல் மருந்து கொடுக்கும் மருந்து கடைகள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொது சுகாதாரம் மற்றம் நோய்த் தடுப்பு இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை வலுப்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் நிலைமையை கண்காணித்து வருகிறது. பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் குறித்து கூடுதல் தகவல் பெற 104 என்ற எண்ணையும், 044-24350496 / 24334811 என்ற தொலைபேசி எண்களையும் 9444340496 / 9361482899 என்ற கைப்பேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.

கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணிகளை மக்கள் இயக்கமாக செயல்படுத்திடவும், தொடர்புடைய துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைப்பு பணிகளை தொய்வில்லாமல் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. தமிழக அரசு முழு முனைப்புடன் செயல்படுத்திவரும் பன்முக தொடர் நடவடிக்கைகளில் அனைவரும் பங்கெடுத்து டெங்கு இல்லா தமிழகத்தை உருவாக்குவது அனைத்து மக்களின் சமூகக் கடமையாகும். இப்பணியில் அனைவரும் தமது பங்கினை உணர்ந்து செயல்பட்டால் இந்நோய்த்தடுப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக செயல்படுத்த இயலும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து