முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘சீனாவில் திகில் அனுபவத்துக்காக வடிவமைக்கப்பட்ட கண்ணாடி பாலம்

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீனாவின் ஹிபெய் மகாணத்தின் தாய்ஹெங் மலை உள்ளது. அங்கு கிழக்கு தாய்ஹெங் பகுதியில் 3,871 அடி உயரத்தில் மலையின் பக்கவாட்டில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 872 அடி நீளம், 6.6 அடி அகலம் கொண்ட இந்த கண்ணாடி பாலத்தில் இருந்து மலையின் அழகை ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஆனால் முதல்முறையாக கண்ணாடி பாலத்துக்கு வருபவர்களுக்கு பயங்கர திகில் காத்திருக்கிறது. அண்மையில் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் முதல்முறையாக கண்ணாடி பாலத்துக்கு சென்றார். அவர் சில அடிகளை எடுத்து வைத்ததும் பயங்கர சத்தத்துடன் பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டன. அதிர்ச்சியில் உறைந்த அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். கைகளை ஊன்றி பாலத்தில் ஊர்ந்தார். அவர் கை வைத்த இடத்திலும் விரிசல்கள் விரிந்து கொண்டே சென்றதால் பயத்தில் பதறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி காண்போரையும் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.

உண்மை என்னவென்றால், கண்ணாடி பாலம் வலுவாக உள்ளது. அதில் விரிசல்கள் விழுவது கிராபிக்ஸின் கைவண்ணம். இதற்காக பாலத்தில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. காலடி அதிர்வை உணர்ந்தவுடன் பாலத்தில் செயற்கையாக விரிசல்கள் தென்படுகின்றன. அப்போது உண்மையான விரிசல் போன்று சத்தமும் எழுகிறது. இதுகுறித்து கிழக்கு தாய்ஹெங் நிர்வாகம் கூறியபோது, திகில் அனுபவத்துக்காகவே பாலத்தை இவ்வாறு வடிவமைத்திருக்கிறோம். விமர்சனங்கள் எழுந்தாலும் கிராபிக்ஸ் விரிசல்களை அகற்றமாட்டோம்” என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து