முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் ரோஹிணி ரா. பாஜிபாகரே துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 13 அக்டோபர் 2017      சேலம்
Image Unavailable

சேலம் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு நிலைகளில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் அம்மாபேட்டை மண்டலத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ரோஹிணி ரா. பாஜிபாகரே துவக்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணி

 

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் துண்டு பிரசுரங்கள் , ஒட்டுவில்லைகள் வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துல், மேலும் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கடிதம் பெற்றோர்களுக்கு தெரிவித்திடும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சேலம் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, மாநகர பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்படும்.

மேலும் மாணவ, மாணவியர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் , மலேரியா களப்பணியாளர்கள், கொசுப்புழுக்களை கண்டறிபவர்கள் ஆகியோர் தெருக்களில் வீடு வீடாக சென்று , தேநீர் விடுதிகள், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், இரு சக்கர வாகன பழுது நீக்கும் இடங்கள் மற்றும் வல்கனைசிங் கடைகள் ஆகியவற்றிற்கு நேரடியாக சென்று டெங்கு விழிப்புணர்வு தொடர்பாக பொதுமக்களிடம் டெங்கு தடுப்பு குறித்த விவரங்களை மாணவ, மாணவியர்கள் தெரிவித்தனர் .

மாணவ, மாணவியர்களுடன் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் உடன் சென்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்துள்ள பிளாஸ்டிக் போன்ற தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தவும், குடியிருப்பு வீடுகளுக்குள் சென்று குடிநீர் சேகரித்து வைக்கப்பட்டுள்ள, சிமெண்ட் தொட்டிகள், பாத்திரங்கள், பிளாஸ்டிக் டிரம்கள், மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவற்றை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தனர். கைத்தெளிப்பான்கள் மூலம் மருந்துகள் தெளிப்பு பணிகளையும் சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து சுகாதாரப் பணியாளர்கள் பொதுமக்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்கி, அடைப்பு ஏற்பட்டுள்ள சாக்கடைகள் தூர்வாரி அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும் பொது மக்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையோ அல்லது அரசு பொது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். மாறாக சுய மருத்துவம் செய்து கொள்ளக் கூடாது போன்ற விவரங்களை மாணவ, மாணவியர்கள் பொது மக்களிடம் தெரிவித்தனர்.

முன்னதாக காலை 7.00 மணி அளவில் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் கலெக்டர் தலைமையில் டெங்கு தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மேற்கொண்ட தீவிர துப்புரவு பணிகள், மருந்து தெளிப்பு பணிகள், கொசுப்புழுக்களை கண்டறிந்து அகற்றும் பணிகள், நிலவேம்பு குடிநீர் வழங்குதல் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் வீடுதோறும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களை கலெக்டர் பொதுமக்களிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் வி. பன்னீர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி. வெங்கடாஜலம், ஏ.பி. சக்திவேல் , மாநகர காவல் ஆணையாளர் கே. சங்கர், ஆணையாளர் ரெ. சதீஷ் , மாவட்ட வருவாய் அலுவலர் டி. சுகுமார், மாநகர துணை காவல் ஆணையாளர் ஜி. சுப்புலட்சுமி , செயற்பொறியாளர் ஜி. காமராஜ் , உதவி ஆணையாளர் ஏ.ஆர்.ஏ.ஜெயராஜ், உதவி செயற்பொறியாளர்கள் , சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து