முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு சட்டக்கல்லூரி தற்காலிக கட்டிடம் ராமநாதபுரத்தில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் அரசு சட்டக்கல்லூரி தற்காலி கட்டிடத்தினை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார்.
 ராமநாதபுரம் அருகே பெருங்குளம் கிராமத்தில் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் ராமநாதபுரம் மாவட்ட அரசு சட்டக்கல்லூரி தற்காலிகமாக செயல்பட இருக்கும் பெருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்தினை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி தனிஅலுவலர் முனைவர்.என்.ராமபிரான் ரஞ்சித்சிங் உடனிருந்தார். நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பேசியதாவது:- இராமநாதபுரம் மாவட்டத்தில் நீண்ட நாள் கோரிக்கையான அரசு சட்டக்கல்லூரி அமைவதற்கு ராமநாதபுரம் மக்களின் சார்பாகவும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் தமிழக முதலமைச்சருக்கு நான் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் கடந்த 25.05.2017 அன்று ராமநாதபுரத்தில் அரசு சட்டக்கல்லூரி தொடங்குவதற்கு அரசானையினை வெளியிட்டார்கள்.அந்த அரசாணையின்படி 5 ஆண்டு சட்டப்படிப்பிற்கு 80 மாணவர்களும்,3 ஆண்டு சட்டப்படிப்பிற்கு 80 மாணவர்களும் இந்த கல்வி ஆண்டிலேயே வகுப்புகள் தொடங்குவதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது. அரசு சட்டக்கல்லூரியினை இக்கல்வியாண்டிலேயே தொடங்குவதற்கு ஏதுவாக ஆரம்பக் கட்டப்பணிகள், கல்வி தளவாடப்பொருட்கள்,ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லா பணியாளர்களின் ஊதியம் ஆகியவற்றினை கவனித்திடும் பொருட்டு தமிழக அரசினால் ரூபாய் 2 கோடியே 26 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
 ராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரிக்கென்று நிரந்தர இடம் அமையும் வரை, பெருங்குளம் கிராமத்தில் ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி வகுப்புகள் தற்காலிகமாக நடத்துவதற்கு ஏதுவாக பெருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடம்  திறக்கப்பட்டுள்ளது. இந்தக்கட்டிடத்தில்  நாளை முதல் வகுப்புகள் நடைபெறும்.மேலும் இக்கல்வியாண்டில் 5 ஆண்டு சட்டப்படிப்பில் 73 மாணவ மாணவியர்களும், 3 ஆண்டு சட்டப்படிப்பில் 16 மாணவர்களும் இதுவரை சேர்க்கை பெற்றுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நிரந்தரமாக சட்டக்கல்லூரி அமைவதற்கு உரிய நடவடிக்கைகளை என் சார்பாகவும்,மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி தனி அலுவலர் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து உரிய இடத்தினை தேர்வுசெய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. உரிய இடம் தேர்வு செய்யப்படும் வரை இந்தக்கட்டிடத்திலேயே சட்டக்கல்லூரி செயல்படும்.
 மேலும் இக்கட்டிடத்தில் சட்டக்கல்லூரி முதல்வர் அறை, அலுவலக அறை, 2 பேராசிரியர்கள் அறை, நூலகம்,மாதிரி நீதிமன்றம், 6 வகுப்பறை,சிறு கலையரங்கம் மற்றும் போதிய கழிவறை வசதியுடன் செயல்பாட்டில் உள்ளது. மாணவர்களுக்கு போதன  வகுப்புகள் நடத்துவதற்கு ஏதுவாக இரண்டு முழு நேரப் பேராசிரியர்களும் மற்றும் 8 கௌரவ பேராசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அலுவலகப் பணிகள் தொய்வின்றி நடத்திட ஏதுவாக உதவியாளர், 2 இளநிலை உதவியாளர்,2 தட்டச்சர்கள்,3 பதிவுறு எழுத்தர் மற்றும் 2 அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் ராம்கோ தலைவர் செ.முருகேசன், மாவட்ட அம்மா பேரசை துணை செயலாளர் மருதுபாண்டியன், ராமநாதபுரம் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, உதவி செயற்பொறியாளர் தி.குருதிவேல்மாறன், ராமநாதபுரம் வட்டாட்சியர் நா.சண்முகசுந்தரம், உட்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து