முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் 64வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா வரும் 14 ம் தேதி முதல் 20ம் தேதி நடக்கிறது: மண்டல இணைப்பதிவாளர் கே.சி.ரவிச்சந்திரன் தகவல்

வியாழக்கிழமை, 9 நவம்பர் 2017      திருச்சி

 

64வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா திருச்சி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் "கூட்டுறவுகளை எண்முறையாக்கல் மூலம் மக்களை ஆளுகையுடையோராக்கல்" எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு 7நாட்களும் கீழ்க்காணும் தலைப்புகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என மண்டல இணை பதிவாளர் கே.சி,ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

கூட்டுறவு வாரவிழா

 

 

14ம்தேதி அன்று முதல் நாள் "கூட்டுறவுகள் மூலம் நல்லாளுகையும் தொழில் முறையாக்கமும்" என்ற தலைப்பின் கீழான நிகழ்ச்சியில் காலை 9.00மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் கூட்டுறவு கொடி ஏற்றி கூட்டுறவு உறுதிமொழி ஏற்கவும் அமராவதி கூட்டுறவு சிறப்பங்காடி, சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி மற்றும் திருச்சிராப்பள்ளி நகர கூட்டுறவு வங்கி ஆகிய கூட்டுறவு நிறுவனங்களில் கூட்டுறவு கொடி ஏற்றுதல் மற்றும் மரம் நடும் விழா நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெறவுள்ளது. மாலை 4.00மணியளவில் உறையூர் தேவாங்க நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

 

15ம்தேதி இரண்டாம் நாள் "உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை கூட்டுறவுகள்" என்ற தலைப்பின் கீழான நிகழ்ச்சியில், புலிவலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் புலிவலம் பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவ முகாம் காலை 7.00மணியளவில் நடைபெறவுள்ளது.

16ம் தேதி மூன்றாம் நாள் "கூட்டுறவு மேம்பாட்டிற்கு வழிகோலும் சட்டமியற்றல்" என்ற தலைப்பின் கீழான நிகழ்ச்சியில் காலை 10.00மணியளவில் கூட்டுறவு இயக்கம் பற்றிய கருத்தரங்கு மற்றும் பட்டிமன்றம் ஸ்ரீநிவாசா ஹாலில் நடைபெறவுள்ளது. 17ம்தேதி நான்காம் நாள் "பொதுத்துறையிலும் தனியார்துறையிலும் கூட்டுறவின் கூட்டாண்மை" என்ற தலைப்பின் கீழான நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களில் மரக்கன்றுகள் நடப்படவுள்ளது. 18ம் தேதி ஐந்தாம் நாள் "தொழில்நுட்ப விழிப்புணர்வு மற்றும் ரொக்கமில்லாப் பரிவர்த்தனை மூலம் நிதி உட்படுத்துதலில் கூட்டுறவுகளின் பங்கு" என்ற தலைப்பின் கீழான நிகழ்ச்சியில் மற்றும் திருச்சிராப்பள்ளி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய மாணவ மாணவியர்கள் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அரசு பல்துறை அலுவலக கட்டிடம், காஜாமலை பகுதிகளில் காலை 8.00மணியளவில் சுத்தம் செய்யப்படவுள்ளது.

மாலை 3.00மணியளவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆகியோருக்கு மக்கள் மன்றம் வளாகத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனை மூலம் நிதி உட்படுத்துதலில் கூட்டுறவுகளின் பங்கு தொடர்பான பயிற்சி மற்றும் யோகா பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. 19ம் தேதி ஆறாம் நாள் "நலிவடைந்தோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்குமான கூட்டுறவுகள்" என்ற தலைப்பின் கீழான நிகழ்ச்சியில் காலை 9.00மணியளவில் அமராவதி கூட்டுறவு சிறப்பங்காடி மற்றும் சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடிகள் மூலம் நுகர்வோர் மேளா நடத்தப்படவுள்ளது. 20ம் தேதி ஏழாம்நாள் "திறன் மேம்பாட்டில் முதன்மைப் பங்காளராகக் கூட்டுறவு" என்ற தலைப்பின் கீழ் காலை 8.00மணியளவில் அரசு மருத்துவமனை வளாகத்தில் இரத்ததான முகாமும், இப்கோ நிறுவனம் மூலம் ஸ்ரீ விநாயகமூர்த்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேளாண் தொழில்நுட்பம் விவசாயிகள் திறன் அறியசெய்தல் தொடர்பான பயிற்சியும், நடைபெறவுள்ளது.

மாடித்தோட்டம்

மாலை 4.00மணியளவில் நகர்புற குடும்ப தலைவிகளுக்கு மாடித்தோட்டம் மற்றும் கீரைத்தோட்டம் அமைத்தல் தொடர்பாக செயல்விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மேற்குறிப்பிட்டவாறு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக வாரவிழாக்குழு கூட்டுனர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கே.சி.இரவிச்சந்திரன் தெரிவித்தார் என திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து