முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த10 வருடங்களில் இல்லாத அளவுக்கு பஞ்சத்தை ஏமன் நாடு எதிர்கொள்ளப் போகிறது: ஐ.நா. எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

ஏமன்: கடந்த பத்து வருடங்களில் இல்லாத மோசமான பஞ்சத்தை ஏமன் நாடு எதிர்கொள்ள போகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்கள் செயலாளர் மார்க் லகாக் கூறியபோது, ''ஏமனின் எல்லைகள் திறக்கப்படாவிட்டால் ஏமன் கடும் பஞ்சத்தால் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். கடந்த பத்து வருடங்களில் உலக நாடுகள் சந்திக்காத பெரும் பஞ்சத்தை ஏமன் சந்திக்க இருக்கிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படவுள்ளனர்'' என்று கூறியுள்ளார்.

தென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
சமீப நாட்களாக ஏமனில் உள் நாட்டுப் போர் தீவிரத்தை அடைந்துள்ளது, கிளர்ச்சியாளர்கள் சவுதியில் தாக்குதல் தொடுத்து வருவதையடுத்து, ஈரான்தான் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை அளிக்கிறது என்று குற்றம் சாட்டியது.

இதனைத் தொடர்ந்து சவுதி - ஏமன் கூட்டுப் படைகள் ஏமன் எல்லைகளை திங்கட்கிழமை மூட உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஏமனில் உள் நாட்டுப் போர் தொடங்கிய 2015-ம் ஆண்டு முதல் இதுவரை 8,670 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 60 சதவீதம் பேர் பொதுமக்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து