முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வண்டலூர் பூங்காவில் 4 புலிக்குட்டிகளை கொன்ற தாய் புலி

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      சென்னை

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 4 புலிக்குட்டிகளை தாய் புலி கொன்ற சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள உத்ரா என்ற பெண் புலி கடந்த 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 4 குட்டிகளை ஈன்றது. இதனால் உயிரியல் பூங்கா அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  இதனால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்து இருந்தது. இந்த நிலையில் பிறந்த 4 புலிக்குட்டிகளும் நேற்று முன்தினம் இறந்து கிடந்தன.  இதுகுறித்து தகவல் அறிந்ததும் உயிரியல் பூங்கா கால்நடை டாக்டர்கள் விரைந்து வந்து புலிக்குட்டிகளை பிரேத பரிசோதனை செய்தனர்.  இறந்த புலிக்குட்டிகளின் கழுத்துக்கும் வயிற்றுப் பகுதிக்கும் இடையே காயங்கள் இருந்தன. எனவே, தாய்ப்புலியே தனது குட்டிகளை கடித்துக் கொன்று இருப்பது தெரிய வந்துள்ளது.தாய்ப்புலி தனது குட்டிகளை பாதுகாப்பான இடத்தில் வைக்க வாயினால் கவ்வி தூக்கி செல்லும். இவ்வாறு தூக்கி சென்ற போது ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அதிக அளவில் ரத்த போக்கு ஏற்பட்டு குட்டிகள் இறந்திருக்கலாம். இது ஒரு விபத்து போன்றது என அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.  அதே நேரத்தில் குட்டிகள் உணவு சாப்பிடாததாலும், கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதிக்கு இடையே ஏற்பட்ட காயம் காரணமாகவும் இறந்துள்ளன என பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  உத்ரா பெண் புலி 4 குட்டிகளை ஈன்றதும் அவற்றை கண்காணிக்க அதன் இருப்பிடத்தை சுற்றி 8 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டன. மேலும் 4 பேர் நியமிக்கப்பட்டு புலிகள் கண்காணிக்கப்பட்டன.  அவர்கள் மரத்தின் மீது ஏறி அமர்ந்து குட்டிகள் பாதுகாப்புடன் இருக்கின்றனவா? என நோட்டமிட்டு வந்தனர். கண்காணிப்பு கேமிராக்கள் பூங்காவின் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டிருந்தது.  தனது இருப்பிடத்தை சுற்றி கேமிராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வந்தது. தாய்ப்புலியான உத்ராவுக்கு வித்தியாசமாக தெரிந்தது. கடும் ஆத்திரமும், வெறியும் ஏற்பட்டுள்ளது. அதனால் அது தனது குட்டிகளை பாதுகாக்க அழுத்தமாக கடித்து தூக்கி சென்றது காயம் எற்படுத்தியுள்ளது.  அதன் காணரமாக குட்டிகள் இறந்து இருப்பதாக வன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் புலி குட்டிகள் படுக்க வசதியாக வைக்கோல் போர்வை அமைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். கண்காணிப்பு கேமிரா பொருத்தியதே புலிக்குட்டிகள் மரணம் அடைய காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.  வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இதுவரை புலிக்குட்டிகள் இறந்தது இல்லை. எனவே பூங்கா காப்பாளர் அது குறித்து பூங்கா உதவி இயக்குனர், வன இலாகா அதிகாரி ஆகியோருக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து துறை ரீதியான விசாரணைக்கு அதிகாரி சுதா உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து