ஆந்திராவில் கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்து 19 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

அமராவதி, ஆந்திராவில் கிருஷ்ணா நதியில் பயணித்தபோது படகு கவிழ்ந்து உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘’கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்தது கவலை அளிக்கிறது. இந்த துயர சம்பவத்தில் தங்களின் வாழ்க்கையை இழந்தவர்களின் குடும்பத்தை நினைத்துப் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.மீட்புப் பணிகளில் ஆந்திர பிரதேச அரசும் தேசிய பேரிடர் மீட்புப் படையும் ஈடுபட்டுள்ளன .
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதியில் தினந்தோறும் மாலையில் நதிக்கு பவித்ர ஹாரத்தி காண்பிக்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் மாலை பவித்ர ஆரத்தியைக் காண ஆந்திர மாநில சுற்றுலாத் துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர். விசைப்படகுகள் மூலம் இப்ரஹிம் பட்டினம் ஃபெர்ரி எனும் இடத்திற்கு சுற்றுலா பயணிகள் சென்றனர்.
சிறிது தூரம் சென்றவுடன் 40 பயணிகளை ஏற்றிச்சென்ற விசைப்படகு நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்ததும் போலீஸார், மீனவர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இதில் இதுவரை 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இறந்தவர்களில் 10 பேர் பெண்கள், 6 பேர் ஆண்கள். இவர்களில் சிலர் ஓங்கோல், விஜயவாடாவைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.