முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணா நதி படகு விபத்தில் பலி எண்ணிக்கை 19-ஆக அதிகரிப்பு: முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு

திங்கட்கிழமை, 13 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

விஜயவாடா, ஆந்திர மாநிலம், விஜயவாடா கிருஷ்ணா நதியில் நேற்று நேற்றுமுன்தினம் மாலை சுற்றுலா சென்ற பயணிகளின் படகு கவிழ்ந்ததில், பலி எண்ணிக்கை 19ஆக உயர்ந்தது. 21 பேர் காப்பாற்றப்பட்டனர். மேலும் 5 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று காலை ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.

விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதியில் தினந்தோறும் மாலையில் நதிக்கு பவித்ர ஹாரத்தி காண்பிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம்  மாலை பவித்ர ஹாரத்தியை காண பவுர்ணமி கரை, பவானி கரையிலிருந்து ஆந்திர மாநில சுற்றுலாத்துறையினர் ஏற்பாடு செய்துள்ள விசைப்படகுகள் மூலம் இப்ரஹிம் பட்டினம், ஃபெர்ரி எனும் இடத்திற்கு பயணிகள் சென்றனர்.

அப்போது சிறிது தூரம் சென்றவுடன் 45 பயணிகளை ஏற்றிச்சென்ற விசைப்படகு நதியில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்ததும் உடனடியாக போலீஸார், மீனவர்கள், உள்ளூர் வாசிகள், தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஞாயிற்று கிழமை இரவு வரை 16 சடலங்கள் மீட்கப்பட்டன. 21 பேர் காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில் விடிய, விடிய மீட்பு பணிகள் நடைபெற்றது. இதில் நேற்று காலை மேலும் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திர முதல்வர் ஹெலிகாப்டரில் ஆய்வு

மீதமுள்ள 5 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. மங்களகிரி பகுதியில் இருந்து 200 தேசிய பேரிடன் மீட்பு குழுவினரும், மாநில பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையின்ர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவ இடத்தை காலை கேரளாவிலிருந்து வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். பின்னர் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள பவானி சங்கமம், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவோரையும் அவர் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

ரூ.8 லட்சம் நிதியுதவி:

உயிரிழந்தர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 8 லட்சம் நிதி உதவி வழங்குவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இதில் சந்திரண்ணா காப்பீடு திட்ட உறுப்பினர்களுக்கு கூடுதலாக ரூ. 2 லட்சம் வழங்குவதாகவும் அரசு அறிவித்துள்ளது.

 அதிகாரிகளின் அலட்சியமே காரணம்:

படகு விபத்திற்கு ஆந்திர மாநில சுற்றுலா துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கே காரணமென தெள்ளத்தெளிவாக தெரியவந்துள்ளது. அதிகாரிகளின் உடந்தையால் இந்த படகு துறையில் சுற்றுலா துறைக்கு தொடர்பில்லாத பல தனியார் படகுகளும் இயக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த தனியார் படகுகளில் 4 சுற்றுலா துறை ஊழியர்கள், அதிகாரிகள் பினாமியாக உள்ளனர். இதில் வரும் வருமானத்தில் இவர்களுக்கும் பங்கு உண்டு என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர் லட்சுமி காந்தம் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதில், சுற்றுலா துறையை சேர்ந்த படகு ஓட்டுனர் ஒருவர்தான், விபத்துக்குள்ளான படகை இயக்கி உள்ளார். இவர் உட்பட படகு நிர்வாகிகள் 3 பேர் தப்பி தலைமறைவாகி உள்ளனர். இதில் ஒருவரை கைது செய்துள்ளதாக விஜயவாடா போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதில் தொடர்புடைய ‘ரிவர் போட்டிங்’ தனியார் படகு நிர்வாகம் மீது கிரிமினல் வழக்கும் தொடரப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில சுற்றுலா துறை அமைச்சர் அகிலப்பிரியா  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மீட்பு பணிகள் தீவிரம்

இந்த படகு விபத்தில் இதுவரை 19பேர் பலியாகி உள்ளனர். 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் விஜயவாடாவில் உள்ள ஆந்திர மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 5 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இறந்தவர்களில் ஓங்கோல் வாக்கர்ஸ் கிளப் சார்பில் வந்த பயணிகள் மற்றும் நெல்லூர், விஜயவாடாவை சேர்ந்தவர்களும் உள்ளனர். இதில் 10 பெண்கள், 8 ஆண்கள், ஒரு 14 வயது சிறுவன் உள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து