முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவோம் என்று சொன்னால் மு.க.ஸ்டாலினுக்கு ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது? - முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

புதன்கிழமை, 22 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

தூத்துக்குடி : ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவோம் என்று சொன்னால் மு.க.ஸ்டாலினுக்கு ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது? என்று தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

தூத்துக்குடியில் நேற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் கலந்துக்கொண்டனர். விழாவில் முதல்வர் எடப்பாடி, எம்.ஜி.ஆர். படத்தை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு 34 புதிய திட்டங்களை முதல்வர் அறிவித்தார். தனது உரையில் முதல்வர் மேலும் கூறியதாவது:-
அம்மாவின் (மறைந்த முதல்வர் ஜெயலலிதா) ஆசியோடு நடைபெறும் அம்மாவினுடைய அரசு திட்டங்களை விரைந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு வரலாறு காணாத வறட்சி காலத்தில் குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. தற்போது பெய்த வெள்ள பாதிப்புகளை சீர்செய்ய அனைத்து இடங்களுக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் நேரடியாக மக்களை சந்தித்து, உடனுக்குடன் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.  

சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சித்தலைவர் பேசுகிறார்,  வேடிக்கையாக இருக்கிறது. தமிழகம் இன்றைக்கு அமைதிப்பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.  இந்தியாவிலேயே சட்டம், ஒழுங்கு சிறப்பாக பேணிக்காக்கப்படுகின்ற மாநிலம் தமிழ்நாடு என்பது மக்களுக்குத் தெரியும். ஆனால் இவர்கள் நினைத்தார்கள், அம்மா மறைந்துவிட்டார், இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும், இந்த கட்சி உடைந்துவிடும் என்றெல்லாம் எண்ணினார்கள். ஆனால் அது ஒன்றுமே நடக்கவில்லை. அதனால் தினந்தோறும் ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள், பத்திரிகைகளில் எல்லாம் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

எம்.ஜி.ஆருடைய நூற்றாண்டு விழாவிலே நான் ஒரு கருத்தைச் சொன்னேன். நானும், துணை முதல்வரும் இரட்டைக்குழல் துப்பாக்கியைப் போல் செயல்படுவோம் என்று ஒரு கருத்தைச் சொன்னேன்.  எங்களுக்கு ஏற்பட்ட கருத்தை நாங்கள் சொல்கின்றோம். நாங்கள் இணைந்து செயல்படுவோம் என்ற கருத்தை நான் வலியுறுத்திச் சொன்னேன், இவர்களுக்கு என்ன கோபம் வருகின்றது என்றுதான் தெரியவில்லை.  அருகில் இருக்கின்ற நெல்லை மாவட்டத்திலே எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் பேசுகின்றபொழுது  இதைக் குறிப்பிட்டுச் சொல்கின்றார். எந்த அளவுக்கு மனக்குமுறல் இருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நம்முடைய கருத்தைச் சொல்கின்றோம், இவருக்கு ஏன் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது? 

ஆகவே, நாம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். இவருடைய எண்ணமெல்லாம் நிறைவேறவில்லை. அம்மா கண்ட கனவு, எனக்கு பின்னாலும், அ.தி.மு.க. 100 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்திலே இருக்கும் என்ற கருத்தை சட்டமன்றத்திலே சொன்னார். அதேபோல் கட்சி வலிமை அடையும் என்று சொன்னார்.  இவர்கள் கண்ட கனவு, அம்மா மறைவிற்குப் பிறகு இந்த இயக்கம் இருக்காது, இந்த இயக்கம் அழிந்துவிடும், இந்த ஆட்சி போய்விடும், நாம் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று பகல்கனவு கண்டார்கள்.  அந்த கனவு பலிக்காத காரணத்தினாலே தினந்தோறும் ஏதாவது ஒரு பொய்யை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். 

நம்முடைய எண்ணமெல்லாம் எம்.ஜி.ஆரும், அம்மா கண்ட கனவை நனவாக்குவது தான் அ.தி.மு.க.வின் ஒவ்வொரு தொண்டனுடைய எண்ணம் என்பதை இந்த நேரத்திலே ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.  நீங்கள் எவ்வளவு பொய்களை அள்ளி வீசினாலும், பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டாலும் ஒரு தொண்டனைக்கூட நீங்கள் தொட்டுப்பார்க்க முடியாது என்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.  அதேபோல, உங்களுடைய ஆட்சியிலே எவ்வளவு சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருந்தது என்பதை நான் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருக்கிறேன், ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். 

2006 ஆம் ஆண்டு தென்காசியில் இந்து முன்னணி அமைப்பாளர் குமாரபாண்டியன் கொலை செய்யப்பட்டார்.  2000-ல்  சிவகங்கை நகரமன்றத்தலைவர் குண்டு வைத்து கொலை செய்யப்பட்டார்.  அதே ஆண்டில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைச்செல்வன் மற்றும் செங்கல்பட்டு நகராட்சி துணைத்தலைவர் குமார் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.  2008ல் பா.ஜ.க.திருவாரூர் மாவட்ட செயலாளர் மாணிக்கம் மற்றும் அவர் தந்தை ஆகியோர் கூலிப்படையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டனர்.  2010ல் அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் கொலை செய்யப்பட்டார். இவ்வளவு பேர் இறந்திருக்கின்றார்கள், சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பது நாட்டு மக்கள் அத்தனைபேருக்கும் தெரியும் என்பதை இந்த நேரத்திலே கோடிட்டுக்காட்ட விரும்புகின்றேன்.

அம்மாவினுடைய அரசு பள்ளிக்கல்வித்துறையில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அம்மா கல்விக்கு முன்னுரிமை கொடுத்தார். கல்வி தமிழகத்தில் சிறந்து விளங்க வேண்டும். எந்தவொரு நாடு, எந்தவொரு மாநிலம் கல்வியிலே சிறந்து விளங்குகின்றதோ அந்த நாடு எல்லா வளங்களையும் பெறும் என்ற தொலைநோக்கு சிந்தனையோடு அம்மா கல்விக்கு முன்னுரிமை கொடுத்தார். அதனால் தமிழகம் இன்றைக்கு வளர்ந்து நிற்கின்றது. கல்வியிலே, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கக்கூடிய அளவிற்கு வளர்ச்சியைப் பார்க்க முடிகின்றது. அதன் அடிப்படையில், பள்ளிக்கல்வித் துறைக்கு ரூபாய் 26,932 கோடியே 31 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து சாதனை படைத்த அரசு அம்மாவினுடைய அரசு.

மேலும், வரும் கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர்களுடைய எதிர்காலம் காக்கப்படும். நடப்பாண்டில், ரூபாய் 391 கோடி செலவில் பள்ளிகளில் முழு கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும். மாணவர்களுக்கு 6 ஆண்டுகளில் மட்டும் சுமார் 37 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது, இந்திய வரலாற்றிலேயே எந்த மாநிலத்திலும் இதுபோன்ற வரலாறு கிடையாது. அம்மா தொலைநோக்கு சிந்தனையோடு நம்முடைய மாணவ, மாணவியர்கள் எதிர்காலத்திலே சிறந்தவர்களாக, வல்லவர்களாக உருவாக வேண்டுமென்பதற்காக மடிக்கணினியை வழங்கினார். இன்றைக்கு வசதி படைத்த குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவியர்கள் ரூபாய் 14,000 மதிப்பில் மடிக்கணினி வாங்கி, பயன்படுத்தி, வேலைவாய்ப்பைப் பெறமுடியும்.

ஆனால் வசதியில்லாத ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவியருக்கும் விஞ்ஞானப்பூர்வமான கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காக சுமார் 37 லட்சம் மாணவ, மாணவியருக்கு ரூபாய் 14,000 மதிப்புள்ள மடிக்கணினிகளை வழங்கி இந்தியாவிலேயே தமிழகம் விஞ்ஞான மாணவர்களை உருவாக்கிய பெருமை அம்மாவைச் சாரும் என்பதை இந்த நிகழ்ச்சி வாயிலாகத் தெரிவித்துக் கொள்கின்றேன். எத்தனை ஆண்டுகாலமானாலும் இத்திட்டம் அம்மாவால் கொண்டுவரப்பட்டது என்பதை நம்முடைய மாணவ, மாணவியர் தெரிவிப்பார்கள் என்பதை கூறிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

அதேபோல, 227 புதிய தொடக்கப்பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன.  116 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 829 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், 402 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி படிக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தவர் நம்முடைய அம்மா என்பதை சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

கடந்த 5 ஆண்டுகளில் அம்மா 65 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை உருவாக்கித் தந்தார். அம்மா வழியில் வந்த அம்மாவினுடைய அரசும் 11 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை வழங்கியிருக்கின்றது. மொத்தம், 6 ஆண்டுகளில் 76 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தமிழக மாணவ, மாணவியருக்கு அளித்திருக்கின்றோம். இதன் மூலமாக கல்வி கற்போரின் எண்ணிக்கை உயர்ந்திருக்கின்றது. ஏழை, எளிய, சமூகத்திலே பொருளாதாரத்தில் பின்தங்கிய வசதியில்லாத குடும்ப மாணவ, மாணவிகள் குறைந்த கட்டணத்திலே உயர்கல்வி கற்பதற்கு சிறந்த வசதியை அம்மா அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அதன் காரணத்தாலே, 2011-ஆம் ஆண்டு அம்மா தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்கின்றபொழுது உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 100-க்கு 21 சதவீதம் தான்  இருந்தது.  இன்றைக்கு அம்மாவினுடைய ஆட்சியில்தான், மருத்துவக் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி, சட்டக்கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி உருவாக்கி மாணவச் செல்வங்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 100-க்கு 21 பேர் படித்த எண்ணிக்கை, 44.32 சதவீதமாக உயர்ந்து, இந்தியாவிலேயே உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் உயர்ந்திருக்கின்றது. மருத்துவத்துறையிலும் இன்றைக்கு சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றோம்.

குடிமராமத்து என்னும் அற்புதமான திட்டத்தின் மூலம், கிராமத்தில் வாழுகின்ற விவசாய மக்களுக்கு நீர் ஆதாரம் வேண்டுமென்பதற்காக, 1519 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு, ரூபாய் 100 கோடி ஒதுக்கப்பட்டு, விவசாயிகளின் பங்களிப்போடு, ஆங்காங்கே இருக்கின்ற ஏரிகள், குளங்கள், குட்டைகளில் இருந்து விவசாயிகளுக்குத் தேவைப்படுகின்ற வண்டல் மண் அள்ளப்பட்டு நிலத்திற்கு அடிஉரமாக இடப்பட்டதோடு, வண்டல் மண் எடுத்த காரணத்தினால் பருவகாலங்களில் பொழிகின்ற மழைநீர் அதிகமான அளவில் தேக்கப்பட்டு, நிலத்தடி நீர் உயர்ந்திருக்கின்றது.

அது மட்டுமல்ல, அம்மாவினுடைய அரசு மூன்றாண்டுகளிலே 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலே எங்கெங்கல்லாம் தடுப்பணை வேண்டுமோ, அங்கங்கெல்லாம் தடுப்பணை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.  நதியின் குறுக்கே, ஓடையின் குறுக்கே, பருவமழை காலங்களிலே மழைநீரை சேமித்து வைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்காக இந்த தடுப்பணை கட்டுகின்ற திட்டத்தை இந்த அரசு துவங்கியிருக்கின்றது.  இதனால், பெய்கின்ற மழைநீர் தேங்கி, நிலத்தடி நீர் உயர்ந்து, விவசாயிகளுக்குத் தேவையான நீர், குடிப்பதற்கு தேவையான நீர் இந்தத் திட்டத்தின் வாயிலாக கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கின்றார்.  எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் உண்மைக்கு மாறாக எதிர்க்கட்சித்தலைவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கின்றார்.  எம்.ஜி.ஆர்.சத்துணவுத் திட்டத்தின் கீழ் 69.3 லட்சம் குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் வாயிலாக முட்டை வழங்கப்பட்டு வருகிறது.  16 லட்சம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் இருமுறை முட்டை வழங்கப்பட்டு வருகிறது.  53.3 லட்சம் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு வாரம் 5 முறை முட்டை வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த திட்டம் 2012 முதல் சத்துணவுத் திட்டத்திற்கு முட்டை கொள்முதல் செய்து வழங்கப்பட்டு வருகின்றது.  இரண்டு நாட்களுக்கு முன்பு, எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டார், இந்தத் திட்டத்தை  கிடப்பிலே போட்டுவிட்டார்கள்.  முட்டைவிலை உயர்ந்த காரணத்தினாலே, முட்டை சாப்பிடுகின்ற சத்துணவு குழந்தைகளுக்கு முட்டை வழங்கவில்லை என்ற கருத்தை சொல்லியிருக்கின்றார். அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அம்மா அரசு ஏழை, எளிய மக்களை காக்கக்கூடிய அரசு, அந்த ஏழை, எளிய மக்கள் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு முட்டையை ஒருபோதும் தடுத்து நிறுத்த மாட்டோம்.

எவ்வளவு பிரச்சினை வந்தாலும் அதற்கு இடம் கொடுக்காமல், அந்த குழந்தைகளுக்கு முட்டைகள் வழங்கிக் கொண்டிருக்கின்றோம் என்ற கருத்தை இந்த நேரத்திலே சொல்லிக் கொள்கிறேன்.  அவர் கருத்து தவறானது, வேண்டுமென்றே இந்த அரசின் மீது பழி சுமத்திக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  அதேபோல, உங்களுடைய மாவட்டத்தினுடைய அமைச்சர் பல்வேறு கோரிக்கைகளைக் கொடுத்தார்.  

இது எம்.ஜி.ஆருக்கு எடுக்கின்ற நூற்றாண்டு விழா.  இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் நீங்கள் அனைவரும் மனநிறைவோடும், மகிழ்ச்சியோடும் இருக்கின்றீர்கள். இவ்விழாவிற்கு வந்திருக்கின்ற மகளிர், குழந்தைகள், தொண்டர்கள், பொது மக்கள் ஆகிய அனைவரும் பத்திரமாக வீடுபோய் சேர்ந்தால்தான் நான் திருப்தியும், மனநிறைவும் அடைவேன். ஆகவே, நீங்கள் அனைவரும் வாகனங்களில் போகிறபோதும், நடந்து போகிற போதும் கவனமாக வீடுபோய் சேரவேண்டும்

இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த நல்ல உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த  பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டு இந்த அரசு உங்களின் சேவகனாக தொடர்ந்து  பணியாற்றும் என்பதை தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து