முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: இ.பி.எஸ்., ஒ.பி.எஸ் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 24 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

ராமநாதபுரம், ராமநாதபுரத்தில்  இன்று எம்.ஜி.ஆர்.நூற்றாண்டுவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள் ,நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். எண்ணம், குறிக்கோள் மற்றும் செயல் அனைத்தும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவதற்காகவே இருந்தது.  அவருடைய வழியை பின்பற்றி முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா  ஏழை, ஏளிய மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து எம்.ஜி.ஆர் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்தார்.

எம்.ஜி.ஆர்  நினைவை போற்றும் வகையிலும், அவர் மக்கள் நலனுக்காக ஆற்றிய பணிகள், அவரது  வரலாறு ஆகியவை குறித்து இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில்; எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் மிக சிறப்பாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட வேண்டும் என்று திட்டமிடப்பட்டது.  அதனடிப்படையில்  தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, தொடக்கவிழா மதுரை மாநகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து  எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவானது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.  இவ்விழா  நடைபெறும் மாவட்டங்களில்,  எம்.ஜி.ஆர்  திரைப்படங்கள்  மற்றும் அரசியல் மூலம் அவர் ஆற்றிய சமூகத்தொண்டு, சீர்திருத்தங்கள் மற்றும் திட்டங்கள் பற்றியும் பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்திடும் வகையில் கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் எம்.ஜி.ஆர்  வாழ்க்கை வரலாற்றை விழாவின்போது பொதுமக்கள் பார்வையிடும் வகையில் சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சியும் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், எம்.ஜி.ஆர். பற்றிய குறும்படமும், அவர் நடித்த திரைப்படங்களும் கிராமப்புறங்களில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு திரை கொண்ட விளம்பர வாகனத்தின் மூலம் திரையிடப்பட்டுள்ளன. அதேவேளையில் அந்தந்த மாவட்டங்களில் அனைத்து அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்கள் மற்றும் அரசின் சாதனைகள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் கண்கவர் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் தமிழகத்தில்  26-வது மாவட்டமாக ராமநாதபுரத்தில்  உள்ள ராமநாதபுரம் டி-பிளாக்,  அம்மா பூங்கா மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா  இன்று மிக சிறப்பாக நடைபெறுகிறது. விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்தினை திறந்து வைத்து, ரூ.81.09 கோடி மதிப்பிலான 135 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ.2.62 கோடி மதிப்பில் கீழக்கரை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டிடத்திற்கு  அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், 26ஆயிரத்து 849 பயனாளிகளுக்கு ரூ.161.20 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்குகிறார்.

விழாவிற்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமை வகிக்கிறார்.  மக்களவை துணைத் தலைவர் டாக்டர்.மு.தம்பிதுரை சிறப்புரையாற்றுகிறார். மேலும் தகவல் தொழில் நுட்பவியல்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் முன்னிலை வகிக்கிறார். இவ்விழாவில் தமிழக அமைச்சர்கள், சட்டப் பேரவை துணைத் தலைவர், அரசு தலைமை கொறடா, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்  அ.அன்வர்ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.கருணாஸ், மலேசியா எஸ்.பாண்டி, தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி புதுடெல்லி மற்றும் வாரியத் தலைவர்கள் பங்கேற்று சிறப்பிப்பார்கள்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர்.கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசுகிறார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் நன்றி கூறுகிறார். பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை .எம்.ஜி.ஆர்.  புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை செய்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து