முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் அதிகரிக்கும் ஐ.எஸ் தீவிரவாத தாக்குதல்கள்: அமைதிக்கான ஆய்வு நிறுவனம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அபாயகரமான அளவு அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானில் 2017ம் ஆண்டில் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள சவால்கள் தொடர்பாக பாகிஸ்தான் அமைதிக்கான ஆய்வு நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

‘‘பாகிஸ்தானில், ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்களை அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. எனினும் அங்கு தீவிரவாதிகளின் தாக்குல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலுஸ்சிஸ்தான் மாகாணத்தில் நடந்த பல தீவிரவாத தாக்குதல்களுக்கு அந்த அமைப்பு நேரடியாக பொறுப்பேற்றுள்ளது. இதன் மூலம் ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து இருப்பதை உறுதி செய்ய முடிகிறது.

குறிப்பாக, பலுசிஸ்தான் மற்றும் சிந்து மாகாணங்களில் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் கடந்த 2017ல் அதிகரித்துள்ளது. இங்கு நடந்த 6 மிகப்பெரிய தாக்குதல்களை அந்த அமைப்பு நடத்தியுள்ளது. இதில், 153 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக தீவிரவாத தாக்குதல்களை பொறுத்தவரை 2017ல், 370 தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் 815 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1736 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுமட்டுமின்றி, தெஹ்ரிக் - இ - பாகி்ஸ்தான், ஜமாத்துல் அஹ்ரார் ஆகிய அமைப்புகளுக்கும், பாகிஸ்தானில் நடந்துள்ள தாக்குதல்களில் 58 சதவீத அளவிற்கு பங்குள்ளது. இதுதவிர, பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் உட்பட வேறு பல தீவிரவாத அமைப்புகள் 5 சதவீத தாக்குதலுக்கு காரணமாக அமைந்துள்ளன. பாகிஸ்தானில் அதிகபட்சமாக, பலுஸ்சிஸ்தான் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில், 288 பேரும், பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் நடந்த தாக்குதல்களில் 255 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுபோலவே ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் நடந்த, 171 தாக்குதல்களில் 188 பேர் உயிரிழந்துள்ளனர். 348 பேர் காயமடைந்துள்ளனர்.

அதேசமயம், 2016ல் 809 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 2017ல் இந்த எண்ணிக்கை, 524 ஆக குறைந்துள்ளது’’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து