முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊதிய உயர்வு மசோதாவுக்கு எதிர்ப்பு: வேண்டாம் என்றால் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு கொடுத்துவிடுங்கள் ஸ்டாலினுக்கு, துணை முதல்வர் ஓ.பி.எஸ் பதிலடி

வெள்ளிக்கிழமை, 12 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதிய உயர்வு வேண்டாம் என்றால் அதை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு கொடுத்துவிடுங்கள் என்று ஊதிய உயர்வு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலினுக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் நேற்று சட்டசபையில் பதிலளித்தார்.

வாக்குவாதம்...
நேற்று எம்.எல்.ஏ.க்களின் ஊதியம் உயர்த்தப்படுவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு தி.மு.க மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் ஊதிய உயர்வு தொடர்பான விவாதத்தின் போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசும்போது, எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு தேவையா? என சபாநாயகரிடம் கடிதம் வழங்குவோம் என்றார். தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு தேவையில்லை என்றார். தமிழகம் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளபோது எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதிய உயர்வு தேவைதானா? என்றும் கேள்வி எழுப்பினார்.

வசதியாக இல்லை...
இதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.க்களின் கருத்துகள், கோரிக்கைகள் அடிப்படையிலேயே ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது என்றார். மேலும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வசதியாக இல்லை என்ற அவர் ஆற்காடு அ.தி.மு.க எம்.எல்.ஏ சித்ரா இன்னும் தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறார் என்று கூறினார்.

யார் காப்பாற்றுவது ?
கடந்த 6 மாதமாக சம்பள உயர்வு பற்றி பேசாத ஸ்டாலின், தற்போது பேசுவது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் ஊதிய உயர்வு தேவையில்லை என்றால் முதல்வர் பொது நிவாரண நிதியில் ஒப்படைத்து விடுங்கள் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நமது எம்.எல்.ஏ.க்ளை நாமே காப்பாற்றாவிட்டால், வேறு யார் காப்பாற்றுவது என கேள்வி எழுப்பினார்.

மசோதா நிறைவேற்றம்
இதையடுத்து பேசிய ஸ்டாலின் உயர்த்தப்பட்ட ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குகிறோம் என்றார். மேலும் சம்பள உயர்வு தேவையில்லை என கையெழுத்து போட்டுள்ளோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். துணை முதல்வர் ஓ.பி.எஸ் சும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் மாறி மாறி பேசியதால் சட்டசபையில் அனல்பறந்தது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் ஊதிய உயர்வு மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து