முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் நகராட்சி,ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பொங்கல் விழா:

வெள்ளிக்கிழமை, 12 ஜனவரி 2018      மதுரை
Image Unavailable

 திருமங்கலம்.- தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரிலுள்ள நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அதிகாரிகளுடன் அலுவலர்கள் இணைந்து சர்க்கரை பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் முன்கூட்டியே நேற்று காலை நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு நகராட்சி ஆணையாளர் திருமதி.சரஸ்வதி தலைமை வகித்தார்.நகராட்சி சுகாதார அலுவலர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார்.நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் வரவேற்றார்.இந்த விழாவில் நகராட்சி அலுவலகத்தில் கரும்புகளால் தோரணம் அமைத்து வண்ணக் கோலங்களிட்டு புதிய பானையில் சர்க்கரை பொங்கலிடப்பட்டு அதிகாரிகள்,அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கரும்புடன் பொங்கல் வழங்கப்பட்டது.பின்னர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை பிரித்து கொடுத்த வீட்டு உரிமையாளர்கள் ஐந்து பேருக்கு கரும்புகள் பரிசாக வழங்கப்பட்டது. அதில் சிறப்பு பரிசாக திருமங்கலம் 14வது வார்டு ரோஜா தோட்டம் பகுதியில் குப்பைகளை சிறப்பாக தரம்பிரித்து கொடுத்த கோட்டைசாமி என்பவரது மனைவி தேவிபிரியாவிற்கு திருமங்கலம் நகராட்சி சார்பில் பொங்கல் சீர்வரிசையாக பொங்கல் பானை,கரும்பு,பச்சரிசி,வெல்லம்,முந்திரிபருப்பு,ஏலக்காய் போன்ற பொருட்களை வீடுதேடிச் சென்று திருமங்கலம் நகராட்சி ஆணையாளர் திருமதி.சரஸ்வதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.இவ்விழாவில் நகராட்சி மேலாளர் மல்லிகா,சுகாதார ஆய்வாளர் சசிகலா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதே போன்று தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை முன்னிட்டு திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொங்கல்விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.இதற்காக அலுவலகம் முழுவதிலும் வண்ணக் கோலங்களிட்டு கரும்புகளை தோரணமாக கட்டி புதுப்பானையில் சர்க்கரைப் பொங்கலிட்டு கோலாகலமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் உதயகுமார்,வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) ராஜேந்திரன்,மேலாளர் சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் சர்க்கரைப் பொங்கலுடன் கரும்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.அப்போது அதிகாரிகள்,அலுலர்கள்,பஞ்சாயத்து கிளார்க்குகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்து வந்திருந்தனர்.
இதை தொடர்ந்து திருமங்கலம் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு திருமங்கலம் சார்பு நீதிமன்ற நீதிபதி ஜி.முத்துக்குமரன் தலைமை வகித்தார்.முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி திருமதி.ஸ்ரீவித்யா,கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி திருமதி.பர்ஷாத்பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருமங்கலம் வழக்கறிஞர் சங்கத்தலைவர் சி.ராமசாமி வரவேற்று பேசினார்.இவ்விழாவில் சங்கத்தின் முன்பாக பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.இதையடுத்து நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கயிறு இழுத்தல்,கண்கட்டி பானை உடைத்தல், இசை நாற்காலி உள்ளிட் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கு நீதிபதிகள் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.இந்த பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.விழாவின் நிறைவில் சங்கத்தின் செயலாளர் கன்னையா நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து