முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெல்வோம் - கேப்டன் விராட் கோலி நம்பிக்கை

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

கேப்டவுன் : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரை வெல்வோம் என்று 3-வது ஒருநாள் போட்டி வெற்றிக்கு பிறகு பேட்டியளித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுடனான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதில் கேப்டன் விராட் கோலி 160 ரன்கள் குவித்தார். வெற்றிக்குப் பின் பேசிய விராட் கோலி கூறியதாவது:-

பலவித யுக்தி...

இந்தப் போட்டியிலும் வென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. 330 ரன்கள் வரை எடுக்கலாம் என நினைத்தோம். ஆனால், 30-வது ஓவருக்குப் பிறகு மாறிவிட்டது. அதனால், 280-290 ரன்கள் என இலக்கு நிர்ணயித்தோம். ஒரு கேப்டனாக கடைசி வரை நின்று பேட்டிங் செய்தது அற்புதமாக இருந்தது. தவான், புவனேஷ்வர்குமார் பார்ட்னர்ஷிப்பும் கைகொடுத்தது. அடுத்த போட்டிதான் முக்கியம். ஒரு நாள் போட்டித் தொடரை இழந்துவிடக் கூடாது என்ற தீவிரத்தில் இருக்கிறோம். அவர்களும் அதை முறியடிக்க பலவித முயற்சிகளோடு வருவார்கள் என்று தெரியும். அதைத் தாண்டியும் வெல்வோம்.

தொடர முடியும்...

நான், இந்த வருடம் 30 வயதை தொடப் போகிறேன். பிட்னஸ் சரியாக இருந்தால்தான் விளையாட்டை, வயதானாலும் தொடர முடியும். இதே போன்ற கிரிக்கெட்டை எனது 34-35 வயதில் கூட விளையாட வேண்டும் என நினைக்கிறேன். அதற்காகக் கடும் பயிற்சி பெறுகிறேன். ஏனென்றால் நான் ஆக்ரோஷமான ஆட்டத்தை ஆட விரும்புபவன். அந்த தீவிரம் போய்விட்டால், நான் என்ன செய்ய முடியும் என்று எனக்கு தெரியவில்லை. அதனால் அந்த தீவிரத்தைப் பாதுகாக்கப் போராடுகிறேன். அதற்காக எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பயிற்சி செய்கிறேன். அணியின் ஒட்டுமொத்த செயல்பாடும் முக்கியம். அது பற்றி சிந்தித்து முடிவெடுத்தால், அற்புதமான விஷயங்கள் நடக்கும்.

கூடுதல் நம்பிக்கை...

இந்நிலையில், குல்தீப், சாஹல் ஜோடியை அடுத்து நடைபெறவுள்ள 2019 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் சேர்க்கப்படுவது தொடர்பாக இந்திய கேப்டன் விராட் கோலி யோசனை தெரிவித்தார். தற்சமயம் குல்தீப் மற்றும் சாஹலின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. அதுவும் இதுபோன்ற வெளிநாட்டு தொடர்களில் விக்கெட் வீழ்த்துவது அவர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தும். இதனால் அவர்கள் தங்களின் மதிப்பை அதிகரித்து வருகின்றனர். இது வரவேற்கத்தக்க ஒன்று. தங்களின் சுழற்பந்து மூலமாக எதிரணி மீது வலைவீசி விக்கெட்டுகளை குவித்து வருகின்றனர்.

எந்த தவறும் இல்லை...

ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக எட்டு விக்கெட்டுகளை இவர்களுக்கு வீழ்த்தி விடுகின்றனர். இது நம்பமுடியாத செயலாகும். பந்துவீசும் போது இவர்களின் தைரியம், தன்நம்பிக்கை மற்றும் கூட்டு முயற்சி பாராட்டுதலுக்குரியது. அனைத்து வீரர்களுக்கும் ஒரு சரிவு காலம் ஏற்படும். ஆனால் இவர்களின் இந்த ஆட்டத்திறன் இப்படியே இருந்தால் வருகிற 2019 உலகக் கோப்பை தொடரில் தவிர்க்க முடியாத சக்தியாக குல்தீப், சாஹல் அமைவர் என்பதில் சந்தேகமில்லை. அடுத்த போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தாலும் எந்த தவறும் இல்லை.

சிறிது காலமாகும்...

ஏனெனில் இவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் செய்யும் தவறுகளில் இருந்து தங்கள் திருத்திக்கொள்கின்றனர். தங்களின் ஆட்டத்திறனை மேம்படுத்த கடினமாக பயிற்சி செய்கின்றனர். எனவேதான் இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் இவர்கள் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குவர். இதேபோன்று டெஸ்ட் போட்டிகளில் இடம்பிடிக்க இன்னும் சிறிது காலமாகும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து