முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசால் வழங்கப்பட இருக்கும் மானிய விலை ஸ்கூட்டிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: பணிக்கு செல்லும் பெண்களுக்கு தமிழக அரசால் வழங்கபட இருக்கும் மானிய விலை ஸ்கூட்டியை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஜெயலலிதா வாக்குறுதி
தமிழகம் முழுவதும் பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று கடந்த சட்டமன்றத்தேர்தலின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். அந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் அதிக பட்சமாக ரூ.25 ஆயிரம் மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

22 முதல் விண்ணப்பம்...
மானிய விலையில் ஸ்கூட்டி வாங்குவதற்கு பெண்கள் இடையே ஆர்வம் அதிகரித்தது.  கடந்த மாதம் 22-ம் தேதி முதல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு மூலம் விண்ணப்பம் வழங்கப்பட்டது. வேலை செய்யும் நிறுவனத்தின் கடிதம், டிரைவிங் லைசென்சு அல்லது பழகுனர் உரிமத்திற்கு விண்ணப்பித்த நகல், வருவாய் சான்று ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண்கள், மானிய ஸ்கூட்டர் வாங்க தகுதியானவர்கள் என்பதால் விண்ணப்பிக்க பெண்களின் கூட்டம் அலைமோதியது.

கால அவகாசம் நீட்டிப்பு ...
முதலில் விண்ணப்பம் கொடுக்க கடைசி தேதி கடந்த 5-ம் தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பெண்களிடம் இருந்து மேலும் சில நாட்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க மேலும் 5 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அந்த நீட்டிப்பு இன்றுடன் நிறைவடைகிறது. கால அவகாசம் இன்று முடிவதால் தமிழகம் முழுவதும் பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

பெண்கள் கூட்டம்....
பழகுனர் உரிமம் பெறுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. இன்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். அதனால் நேற்று ஏராளமான பெண்கள் பழகுனர் உரிமம் பெறுவதில் ஆர்வம்காட்டினர். இத்திட்டத்தில் முதல் கட்டமாக ஒரு லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதுவரையில் 2 லட்சத்திற்கும் மேலான பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். இன்று அதிகளவு விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கூட்டம் குறைந்த பாடில்லை. காலையிலே பெண்கள் நீண்ட வரிசையில் விண்ணப்பத்தை சமர்பிக்க காத்து நின்றனர்.

ஆய்வு செய்யும் பணி...
தண்டையார்பேட்டை மண்டலத்தில் தான் அதிகளவு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரையில் 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் சென்னையில் 9,500 பேருக்குதான் ஸ்கூட்டி வாங்குவதற்கு மானியம் வழங்கப்பட உள்ளது. அதனால் தகுதியான விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான வருகிற 24-ம் தேதி இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். அதற்குள்ளாக விண்ணப்ப படிவங்களுடன் சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரியாக இருக்கிறதா? என அதிகாரிகள் பரிசீலனை செய்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து