முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி மேலாண்மை வாரியம் - முறைப்படுத்தும் குழுவை அமைக்கக்கோரி அனைத்துக்கட்சி தலைவர்களுடன் சென்று பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி - சென்னையில் நடந்த கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம்

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க வலியுறுத்தி, தமிழக அனைத்துக்கட்சித் தலைவர்கள், எம்.பி.க்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்  முடிவெடுக்கப்பட்டுள்ளது.

காவிரி பிரச்னை தொடர்பாக தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி தலைவர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கூட்டம் நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலை 10 மணி முதலே அனைத்துக்கட்சி தலைவர்கள் தலைமை செயலகத்திற்கு வருகை தந்தனர். அவர்களை டெல்டா பகுதியை சேர்ந்த அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் வரவேற்று நாமக்கல் மாளிகை 10-வது தளத்தில் அமரவைத்தனர். இந்த கூட்டத்தில் 30 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-

காவிரி பிரச்சனை குறித்து சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்களின் ஆலோசனைக்  கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மேல்நடவடிக்கைகள்....

காவிரி பிரச்னையில், தமிழ் நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், காவிரி நதிநீரைக்கொண்டு விவசாயம் செய்து வரும் தமிழ்நாடு வேளாண் பெருங்குடி மக்களின் நலனைப் பேணிக்காக்கவும், உச்சநீதிமன்றம் 16-ம் தேதி பிறப்பித்துள்ள தீர்ப்பின்மீது எடுக்கப்பட வேண்டிய மேல்நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கு ஏதுவாக நேற்று காலை 10.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஒருமனதாக நிறைவேற்றம்...

இக்கூட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து, அவர்களின்  கருத்துக்கள் பெறப்பட்டு கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டுக்குரிய பங்கு நீரினை உரிய காலத்தில் வழங்குவதற்குஏதுவாக, அனைத்து  அதிகாரங்களும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர்  முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உச்ச நீதிமன்றத்தின் 16-ம் தேதிய தீர்ப்பின்படி, ஆறு  வார காலத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டி வலியுறுத்தப்படும். உச்சநீதிமன்றத்  தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கு, காவிரி நடுவர் மன்றம் இறுதி ஆணையில் வழங்கிய நீரில்,  14.75 டி.எம்.சி அடி நீரை குறைத்து கர்நாடகத்திற்கு கூடுதலாக வழங்கி உத்திரவிட்டது குறித்து, அனைத்துக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை முழுமையாக ஏற்றுக் கொண்டு, சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரதமரை சந்திக்க முடிவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அனைத்துக் கட்சித் தலைவர்கள், விவசாய சங்கத்  தலைவர்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள்  அடங்கிய குழுவுடன் பிரதமரை விரைவில் நேரில் சந்தித்து, காவிரி  மேலாண்மைவாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை  உடனடியாக அமைக்கவும் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலுள்ள தமிழ்நாட்டிற்கு சாதகமான அம்சங்களை உடனடியாக நிறைவேற்றித் தருமாறும் வலியுறுத்தப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வர் வேண்டுகோள்

முன்னதாக இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி பிரச்சனையில் அனைத்துக்கட்சிகளும் ஒரணியில் திரண்டு தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட பாடுபடவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். மேலும் இக்கூட்டத்தில் காவிரி பிச்சனையில் அரசால் இதுவரை எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.

இக்கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க.வின் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்,  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து