முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி: தடயவியல் அறிக்கையில் வெளியான தகவல்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      சினிமா
Image Unavailable

துபாய், துபாய் ஓட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் குடி போதையில் இருந்த நடிகை ஸ்ரீதேவி நீரில் மூழ்கியதால்தான் அவர் மரணமடைந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கல்ப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

துபாயில் நடிகர் மோஹித் மார்வா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இடத்தில் ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்தாக தகவல்கள் தெரிவித்தன.  இந்நிலையில் அவரது உடலுக்கு நேற்று இரவு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. தற்போது அவரது இறப்பு குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. துபாயின் அதிகாரப்பூர்வ நாளேடான கல்ப் நியூஸ் என்ற செய்தி நிறுவனம், ஸ்ரீதேவியின் உடற்கூறாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களை வெளியிட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு அவர் தங்கியிருந்த ஜூமைரா எமிரேட்ஸ் டவர் ஓட்டல் அறையில் உள்ள குளியல் அறைக்கு ஸ்ரீதேவி சென்றிருந்த போது அவர் குடிபோதையில் இருந்ததாகவும் , நீரில் எதிர்பாராதவிதமாக மூழ்கி அவர் உயிரிழந்தார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதாக சோதனையில் தெரியவந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி அவரது இறப்பில் குற்றவியல் நோக்கம் ஏதும் இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீதேவி மாரடைப்பால் இறப்பதற்கு முன் நடந்தது என்ன என்பது குறித்து குடும்ப வட்டாரங்கள் சில தகவல்களை கூறியுள்ளனர்.

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், துபாயில் திருமணம் முடிந்தபின் மீண்டும் மும்பைக்கு சென்று விட்டார். பின் தனது மனைவி ஸ்ரீதேவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக மீண்டும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு மும்பையில் இருந்து துபாய்க்கு சென்றுள்ளார். அங்குள்ள ஜுமைரா எமிரேட்ஸ் டவர் ஓட்டலுக்கு சென்று ஸ்ரீதேவியை போனிகபூர் சந்தித்துள்ளார். கணவரை  கண்டதும் ஸ்ரீதேவி அதிர்ச்சியுடன் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஓட்டல் அறையில் இருந்து ஸ்ரீதேவியை அழைத்துக் கொண்டு ஒரு விருந்துக்கு செல்ல போனி கபூர் திட்டமிட்டு இருந்தார். இதை முன்கூட்டியே ஸ்ரீதேவியிடம் சொல்லாமல் விரைவாக தயாராகுமாறு போனி கபூர் கூறி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூருடன் வெளியே புறப்பட்டுச் செல்ல தயாராகிக் கொண்டு இருந்தார். அப்போது குளியல் அறைக்கு சென்ற ஸ்ரீதேவி 15 நிமிடங்களுக்கு மேலாகியும் அவர் வெளியே வராதது கண்டு போனி கபூருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, குளியல் அறை கதவை தட்டியும், ஸ்ரீதேவி திறக்கவில்லை. இதையடுத்து, கதவை வலுக்கட்டாயமாக திறந்து பார்த்த போது, ஸ்ரீதேவி குளியல் அறை தொட்டியில் மூர்ச்சையாகி கிடந்துள்ளார்.

இதைக்கண்டு, போனிகபூர் அதிர்ச்சி அடைந்து . ஸ்ரீதேவியை குளியல் தொட்டியில் இருந்து தூக்கி, தனது நண்பருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் போலீஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போலீஸார் வருவதற்குள் ஸ்ரீதேவி உயிரிழந்து விட்டார் என அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று அவர்களது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளர். தனது அன்பு மனைவி ஸ்ரீதேவிக்கு விருந்து அளிக்க நினைத்த போனி கபூரின் ஆசையும், நிறைவேறவில்லை, கணவருடன் வெளியே செல்லப் போகிறோம் என்று ஸ்ரீதேவியின் ஆசையும் நிறைவில்லை என்றும் அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் உடல் நேற்று இரவு தனி விமானம் மூலம் துபாயில் இருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. மும்பையில் உள்ள ஸ்ரீதேவியின் இல்லத்தில் அவரது உடல் ரசிகர்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் கமலஹாசன் சென்னையில் இருந்து மும்பை சென்றுள்ளார். நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு பாலிவுட், கோலிவுட்டை சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் உறவினர்கள், ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து