முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியாவுக்கு சென்ற தென்கொரியாவின் சிறப்பு தூதர் குழு இன்று நாடு திரும்புகிறது

திங்கட்கிழமை, 5 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

சியோல் : வடகொரியா உடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, அந்நாட்டுக்கு தென்கொரியாவின் சிறப்பு தூதர் குழு நேற்று (மார்ச் 5 தேதி ) சென்றது.பேச்சுவார்த்தை முடிந்து இன்று மார்ச் 6 ம்தேதி நாடு திரும்புகிறது.

இதுகுறித்து தென் கொரிய அதிபர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:

அண்மையில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா மற்றும் தென் கொரிய நாடுகள் இணைந்து பங்கேற்றதற்கு பிறகு ஏற்பட்டுள்ள சாதகமான சூழலில் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன், தூதர் குழுவை அனுப்பும் இந்த முடிவை மேற்கொண்டுள்ளார். அவரது ஒப்புதலின் பேரில், சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு மேலும் வலு சேர்த்திடும் வகையில் சிறப்புத் தூதர் குழு திங்கள்கிழமை வட கொரியா சென்றது.

இந்த சிறப்புத் தூதர் குழுவில், தென் கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷங் இ-யங், உளவுத்துறை தலைவர் ஷுக் ஹுன் உள்ளிட்ட 5 முக்கிய உயரதிகாரிகள், 5 துணை அதிகாரிகள் என மொத்தம் 10 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அணு ஆயுதங்கள் தொடர்பாக வாஷிங்டன் மற்றும் பியோங்யாங் இடையில் நின்றுபோன பேச்சுவார்த்தையை மீண்டும் முன்னெடுப்பது குறித்து வடகொரிய அதிகாரிகளிடம் இந்தக் குழு விரிவாக ஆலோசனை நடத்தும். மேலும், இரு கொரிய நாடுகளுக்கிடையில் வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

நேற்று (மார்ச் 5 தேதி ) வட கொரியா சென்ற  இந்த சிறப்பு தூதர் குழு இன்று  (செவ்வாய்கிழமை மார்ச் 6 தேதி )  தென்கொரியா வந்தடையும். அதன் பின்பு, அந்தக் குழு அமெரிக்காவுக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து வாஷிங்டன் அதிகாரிகளை சந்தித்து எடுத்துரைக்கும் என்றார் அவர்.

தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக வந்திருந்த வட கொரியத் தலைவர்கள், அதிபர் மூன் ஜேன்-இன்னை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் விரும்புவதாகத் தெரிவித்திருந்தனர்.

மேலும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்ககேற்பதற்காக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் இளைய சகோதரி ஜிம் யோ-ஜோங் தென் கொரியா வந்தார். இந்த இணக்கமான சூழ்நிலையில் தென் கொரியா தனது தூதர் குழுவை வட கொரியாவுக்கு அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து