முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசியலில் வெற்றிடம் ஏதும் இல்லை: நடிகர் ரஜினிகாந்த்துக்கு முதல்வர் இ.பி.எஸ் பதிலடி

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக அரசியலில் வெற்றிடம் ஏதும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். மேலும், பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்ற எச். ராஜாவின் கருத்துக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெரியார் குறித்த கருத்துக்கு எச்.ராஜா பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார்.

மகளிர் தின விழா

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் மகளிருக்கு தையல் மிஷன்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க தலைமைக்கழகத்தில் இருவரும் நிருபர்களுக்கு அவர்கள் பேட்டி அளித்தனர்.

பல்வேறு திட்டங்கள்...

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

மகளிர் தினத்தையொட்டி பெண்கள் அனைவருக்கும் இதயப்பூர்வான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார். அவருடைய வழியில் அம்மா இரு வாகனத்திட்டத்தை அண்மையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஜெயலலிதாவின் வழியில் தமிழக அரசு தொடங்கிய இந்த திட்டத்திற்காக 3 லட்சத்து 35 ஆயிரம் விண்ணப்பங்களை பெண்கள் வழங்கியிருப்பது மிக பெரிய சாதனையாகும். அ.தி.மு.கவில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியவரும் ஜெயலலிதா தான் என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து நிருபர்கள் எழுப்பிய கேள்விகளும் முதல்வர் அளித்த பதில்களும் வருமாறு:

*திருச்சியில் நடைபெற்ற சம்பவத்தில் போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா:?

இந்த சம்பவம் துர்திர்ஷ்வசமானது. குறிப்பிட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்பத்தினரின் கோரிக்கை குறித்து அரசு பரீசிலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது காவல்துறை மாநாட்டில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடும் கண்டனம்...

*பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று தனது ட்விட்டரில் எச்.ராஜா பதிவிட்டுள்ளாரே?

தனக்கு தெரியாமல் ட்விட்டரில் தனது உதவியாளர் வெளியிட்டுள்ளதாக எச்.ராஜா கூறியிருக்கிறார். அதற்கு வருத்தத்தையும் தெரிவித்து இருக்கிறார். அவருக்கு தெரியாமல் உதவியாளர் இப்படிப்பட்ட கருத்தை வெளியிட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பெரியார் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர். அவரது. சிலை அகற்றப்பட வேண்டும் என்பது கண்டிக்கத்தக்கது. மேலும் தமிழகத்தில் உள்ள எந்த தலைவர்களின் சிலை சேதப்படுத்தப்பட்டாலும் அது குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தலைவர்களின் சிலைகளுக்கு தக்க பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தலைவர்களின் சிலைகளை தாக்க முற்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விரைவில் நடவடிக்கை

*நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் எப்போது நியமிக்கப்படுவார்கள்?

இது குறித்து அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்துடன் கலந்து பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

கண்டனத்திற்குரியவை

அதை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,   பெரியார் குறித்து பா.ஜ.க தேசிய செயலாளர் எச். ராஜா கூறிய கருத்துகள் கண்டனத்திற்குரியவை. அவருடைய உதவியாளர் தான் பதிவு செய்தார் என்று எச்.ராஜா கூறும் கருத்தும் அபத்தமாக உள்ளது. தனது தவறுக்கு எச்.ராஜா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். திராவிட இயக்கத்தின் தலைக்காவிரியாக இருப்பவர் தந்தை பெரியார். அவரது பகுத்தறிவு கொள்கைகளால் தான் இன்று சாதாரண மனிதன் கூட முதல்வராக, பொதுவாழ்வில் ஏற்றம் பெறுபவர்களாக இருக்க முடிகிறது. தமிழக மக்களுக்கான சமுதாய புரட்சியை ஏற்படுத்தியவர் பெரியார். அவரைப் பற்றி எச். ராஜா கூறிய கருத்துகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை.

உண்மைத் தன்மை...

எச்.ராஜா தானே பல்டி அடித்து தான் அந்தப் பதிவை போடவில்லை என்று கூறி இருக்கிறார். அதன் உண்மைத் தன்மை என்ன என்பது கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். துணிச்சலான கருத்துகளை சொல்லக்கூடியவர் பெரியார் தமிழ்ச்சமுதாயம் வளர்வதற்காகவே தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் பெரியார். இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து