முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

விருதுநகர்: கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வற்புறுத்தல் அளித்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டிக்கு சாத்தூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை அக்கல்லூரியின் துணை பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகளுக்காக பாலியல் தேவைக்கு உட்படுமாறு வற்புறுத்துவது போன்ற ஆடியோ வெளியானது. இதையடுத்து, கடந்த 16-ம் தேதி பேராசிரியை நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரி செயலர் ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் பேராசிரியர் மீது அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஓய்வு பெற்ற நீதிபதி சந்தானம் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை டி.ஜி.பி ராஜேந்திரன் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து,  சி.பி.சி.ஐ.டி விசாரணை அதிகாரி ராஜேஸ்வரி தலைமையில் இந்த வழக்கு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சி.பி.சி.ஐ.டி போலீஸார் 9 குழுக்களாக பிரிந்து இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நிர்மலாதேவியை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டிபோலீஸார் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், சாத்தூர் நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலாதேவியை நேற்று போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது, நிர்மலா தேவியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு சாத்தூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

முன்னதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பதிவாளர் சின்னையா அறையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். நிர்மலா தேவிக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பதிவாளர் சின்னையாவிடமும் விசாரணை நடத்தினர். 5 பேர் கொண்ட சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் இந்த விசாரணையை நடத்தினர்.

மேலும் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலக ஊழியர்களிடமும் இந்த விசாரணை நடத்தப்பட்டது. சி.பி.சி.ஐ.டி போலீஸார் நிர்மலா தேவியை ஐந்து நாள் காவலில் விசாரிக்க உள்ள நிலையில் அவர் அளிக்கும் வாக்குமூலம் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி விசாரணை இன்னும் தீவிரமாகும் எனத் தெரிகிறது. இந்நிலையில், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானமும் தனது விசாரணையை நேற்று தொடங்கினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து