முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு: இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பழச்சாறு கொடுத்து அமைச்சர் முடித்து வைத்தார்

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: அமைச்சர் செங்கோட்டையனுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 4 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர். பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது.

உண்ணாவிரதம்
“சம வேலைக்கு சம ஊதியம்” வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வந்தது. கடந்த 23-ம் தேதி டி.பி.ஐ. கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரதம் இருக்க சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் - ஆசிரியைகளை போலீசார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு தங்க வைக்கப்பட்ட ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.

பல சிரமங்கள்...
சுமார் 2 ஆயிரம் ஆசிரியைகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியைகளில் சிலர் தங்கள் கைக்குழந்தைகளுடனும் உண்ணாவிரதம் இருந்தனர். ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து அவர்களை போலீசார் வெளியேற்ற முயன்றனர். போராட்டத்தில் அதிகளவு பெண் ஆசிரியர்கள் பங்கேற்றதால் போலீசாருக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.
ஆனாலும் நேற்று முன்தினம் இரவு ஆசிரியர்கள் அனைவரையும் வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு போலீசார் மாற்றம் செய்தனர். ஆனால், அங்கும் தொடர்ந்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.

பேச்சுவார்த்தை
அவர்களை தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி சந்தித்து பேசினார். பள்ளிக்கல்வி செயலாளர் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஒருநபர் கமிஷன் அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார். அதனை ஆசிரியர் பிரதிநிதிகள் ஏற்கவில்லை.

போராட்டம் வாபஸ்
இந்நிலையில், இரண்டாவது கட்டமாக பிரதிநிதிகளுடன் அமைச்சர் நேற்று  மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, தங்களது உண்ணாவிரத போராட்டத்தை ஆசிரியர்கள் வாபஸ் பெற்றனர். அமைச்சர் அவர்களுக்கு பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து