முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாளில் 4வது கொலை திண்டுக்கல்லில் மனைவியை வெட்டி கொன்ற போதை கணவர் கைது

திங்கட்கிழமை, 14 மே 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் மனைவியை வெட்டிக் கொன்ற போதை கணவரைப் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் சவரியார்பாளையம் ஜீவா நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார்(35). இவரது மனைவி தனசீலி(31). இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தருண்(12), வருண்(10), ஆரவ்(6) ஆகிய 3 மகன்களும், தர்சினி(8) என்ற மகளும் உள்ளனர். இறைச்சிக் கடையில் வேலை பார்த்து வந்த அருண்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். வீட்டிற்கு செலவுக்கு பணம் தராமல் மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார். இதனால் தனசீலி தனது 4 குழந்தைகளுடன் தாய் புஷ்பா வீட்டில் வைத்து வளர்த்து வந்தார். கணவர் வருமானம் இல்லாததால் இரும்புக் கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். இருந்தபோதும் அருண்குமார் அடிக்கடி அங்கு வந்து தகராறு செய்து வந்தார்.
தனது கணவரால் எந்தவித பலனும் இல்லாத நிலையில், அவரது சித்ரவதையை தாங்க முடியாமல் கடந்த மாதம் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் குறித்து தனசீலி புகார் அளித்திருந்தார். இதனையடுத்து போலீசார் அருண்குமாரை வரவழைத்து எச்சரித்து இனிமேல் எவ்வித பிரச்சனையும் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி அனுப்பினர். இதனால் தனது மனைவி மீது அருண்குமார் மேலும் ஆத்திரத்தில் இருந்தார். நேற்று காலை தனசீலி வேலைக்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது போதையில் வந்த கணவர், தனசீலியுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் ஆத்திரம் தலைக்கேறிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனசீலியின் கழுத்து, வயிறு ஆகிய பகுதிகளில் வெட்டி சாய்த்தார். இதில் சம்பவ இடத்திலேயே தனசீலி துடிதுடித்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகர் தெற்கு போலீசார்  அங்குவிரைந்து வந்து கொலை செய்யப்பட்ட தனசீலியின் உடலைக் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த கணவர் அருண்குமாரையும் கைது செய்தனர்.
ஏற்கனவே கஷ்டமான சூழ்நிலையில் தாயிடம் வளர்ந்து வந்த 4 குழந்தைகள் தனசீலியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது அங்கு கூடியிருந்தவர்களின் மனதை உருக்கும் வகையில் இருந்தது. தாய் இறந்துவிட்ட நிலையில், தந்தையும் சிறைக்கு சென்று விட்டதால் 4 குழந்தைகளும் என்ன செய்யப் போகிறார்களோ என்ற வேதனையும் அவர்களை உலுக்கியது.
4வது கொலை
திண்டுக்கல்லில் கடந்த சனிக்கிழமை கள்ளக்காதல் பிரச்சனையில் பாலாம்பிகை என்ற பெண்ணை கொலை செய்து விட்டு பிரசாந்த் என்ற வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். மறுநாளான ஞாயிற்றுக்கிழமை பேகம்ஞீரில் குடும்ப தகராறு காரணமாக இரு பெண்கள் குத்திக் கொலை செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மனைவியை கணவர் குத்திக் கொலை செய்துள்ளார். தொடர்ந்து 3 நாட்களில் 4 கொலைகள் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து