முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.100 கோடி - அமைச்சர் பதவி தருகிறோம்! எம்.எல்.ஏ.க்களுக்கு ஆசை காட்டி பாரதீய ஜனதா வலை விரிக்கிறது குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

புதன்கிழமை, 16 மே 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கில், ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.க்களை இழுக்க ரூ.100 கோடியும், அமைச்சர் பதவியும் தருவதாக ஆசை வார்த்தை கூறி பாரதீய ஜனதா வலை விரிக்கிறது என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில் 104 இடங்கள் பெற்ற பா.ஜ.க.வை ஆட்சியில் அமர விடக்கூடாது என்று நோக்கில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது 78 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி. காங்கிரசின் நிபந்தனையற்ற ஆதரவை தேவகவுடா, அவரின் மகன் குமாரசாமி ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்களும் நேற்று முன்தினம் கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்கக் கோரினர். அதே சமயம், தனிப்பெரும் கட்சி என்ற ரீதியில் பா.ஜ.க.வினரும் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

இந்நிலையில் 104 இடங்களில் வென்ற பா.ஜ.க. ஆட்சி அமைக்க இன்னும் 8 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் போதுமானது. ஆதலால், காங்கிரஸ், ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ்,ஜே.டி.எஸ். கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நேற்று காலை நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு 78 பேரில் 66 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 12 பேரைக் காணவில்லை. அதே போல, ஜே.டி.எஸ். கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் 2 எம்.எல்.ஏ.க்களைக் காணவில்லை. இதையடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி ஊடகங்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
மாநிலத்தில் பெரும்பான்மை உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். அதற்கான முயற்சியில் கவர்னரை சந்தித்துள்ளோம். ஆனால், மணிப்பூர், கோவாவில் பெரும்பான்மை இல்லாமல், பா.ஜ.க. ஆட்சிஅமைத்தது. அதேபோன்ற முயற்சிகளை பா.ஜ.க. இங்கும் செய்ய முயல்கிறது. இதற்காக எங்கள் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.100 கோடியும், அமைச்சர் பதவியும் தருவதாக ஆசை வார்த்தை கூறுகிறார்கள்.

ரூ.100 கோடி கறுப்புப் பணம் எங்கிருந்து வந்தது?. ஏழைகளுக்கு சேவை செய்கிறவர்களுக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது. வருமானவரித்துறையினர் எங்கு சென்றார்கள்?. பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய இருதரப்பில் இருந்தும் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை சாதாரண வார்த்தையாகக் கூறவில்லை. கடந்த 2004, 2005-ம் ஆண்டு பா.ஜ.க. பக்கம் சென்ற எனது முடிவால், என் தந்தையின் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய கரும்புள்ளி விழுந்து விட்டது. இப்போது அந்த கரும் புள்ளியை நீக்க கடவுள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ஆதலால், நான் காங்கிரஸ் பக்கம் செல்கிறேன்.

பா.ஜ.க. நடத்தும் அஸ்வமேத யாக யாத்திரை வடக்கில் இருந்தில் தொடங்கியது. தற்போது கர்நாடகவில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அந்த அஸ்வமேத யாத்திரையின் பயணம் கர்நாடகத் தீர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பா.ஜ.க.வில் இருந்து வெளியேறத் தயாராக இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் வாருங்கள். நீங்கள் எங்கள் அணியில் இருந்து எம்.எல்.ஏ.க்களை பிரிக்க நினைத்தால், பதிலுக்கு அது போன்றே செய்து, இரு மடங்கு எம்.எல்.ஏ.க்களை இழுப்போம். குதிரை பேரத்தை ஊக்கப்படுத்தும் வகையில் எந்தவகையான முடிவையும் எடுக்காதீர்கள் என கவர்னரிடமும் கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.

மீண்டும் நாங்கள் கவர்னரை சந்திப்போம். நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் கொடுத்திருப்பதால், ஆட்சியை நடத்திச் செல்வதில் எந்தவிதமான சிக்கலும் இருக்காது எனத் தெரிவிப்போம். இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து