முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-ரஷ்ய உறவை பிரிக்க முடியாது: பிரதமர் மோடி

செவ்வாய்க்கிழமை, 22 மே 2018      உலகம்
Image Unavailable

மாஸ்கோ: இந்தியா-ரஷ்யா இடையேயான உறவைப் பிரிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர்  புடினுடனான சந்திப்பின்போது, இந்த கருத்தை பெருமிதத்துடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில் உள்ள கடற்கரை நகரான சோச்சியில் அந்நாட்டு அதிபர் புடினை பிரதமர் மோடி நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் ஏற்படும் தாக்கம், சிரியா விவகாரம், மத்திய கிழக்குப் பிரச்னை, கொரிய தீபகற்ப விவகாரம் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்தும், இந்தியா-ரஷ்யா இடையேயான

இருதரப்பு உறவு குறித்தும் தலைவர்கள் இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது புடினிடம் பிரதமர் மோடி கூறியதாவது,
இந்தியாவும், ரஷ்யாவும் நீண்டகாலமாக நட்பு நாடுகளாக உள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது. எனது இந்த ரஷ்ய பயணமானது முன்கூட்டியே திட்டமிடப்படாதது ஆகும். இந்தப் பயணத்துக்கு எனக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். இருதரப்பு உறவில், திட்டமிடப்படாத சந்திப்பின் மூலம் புதிய வடிவை நீங்கள் கொடுத்துள்ளீர்கள். இதுவொரு சிறந்த நிகழ்வாகும். இது இரண்டு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

ரஷ்யாவுக்கு முதல்முறையாக கடந்த 2001-ம் ஆண்டில் அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயுடன் நான் வந்தேன். எனது அரசியல் வாழ்க்கையில், ரஷ்யாவும், நீங்களும் (புடின்) மிகவும் முக்கியமானவர்கள் ஆவர். குஜராத் முதல்வராக நான் பதவியேற்றபிறகு, நான் சந்தித்த முதல் வெளிநாட்டுத் தலைவரும் நீங்கள்தான். எனது வெளிநாட்டு நட்புறவானது, ரஷ்யாவிடம் இருந்தும், உங்களிடம் இருந்தும்தான் தொடங்கின. அன்று முதல் கடந்த 18 ஆண்டுகளில், உங்களைச் சந்திப்பதற்கும், உங்களுடன் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசுவதற்கும், இந்தியா-ரஷ்யா இடையேயான உறவை முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளை எடுப்பதற்கும் எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சேர்த்து கொள்ளப்பட முக்கிய பங்காற்றியதற்கு ரஷ்யாவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து முனையத் திட்டம், பிரிக்ஸ் அமைப்பு ஆகியவற்றில் நமது இரு நாடுகளும் நெருங்கி செயல்பட்டு வருகின்றன. ரஷ்ய அதிபராக 4-வது முறையாக அதிக பெரும்பான்மையுடன் தேர்வு செய்யப்பட்டிருக்கும் உங்களுக்கு (புடினுக்கு) எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரஷ்ய அதிபராக நீங்கள் தேர்வு செய்யப்பட்டதும், உங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தது, அதைத் தொடர்ந்து தற்போது நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 2000-ம் ஆண்டில் ரஷ்ய அதிபராக நீங்கள் பதவியேற்ற காலத்தில் இருந்து, இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு வரலாறாகி விட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து