முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடியில் போராட்டம் கலவரமானதால் துப்பாக்கிச்சூடு தவிர்க்க முடியாததாகி விட்டது அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 22 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியதால், போலீஸாரின் துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாததாகி விட்டது என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 2013-ம் ஆண்டில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால், அதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் ஆலையைத் திறக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு தமிழக அரசு எந்தவித அனுமதியும் வழங்கவில்லை.

தமிழக அரசு மக்களுடைய உணர்வை மதிக்கின்ற அரசாக உள்ளது. மக்களின் உணர்வுக்கு எதிராக செயல்படக் கூடாது என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். பசுமை தீர்ப்பாயத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் ஆலைக்கு எதிரான வாதங்களை தமிழக அரசு கடுமையாக முன்வைத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிக்கக் கூடாது என பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

மக்கள் விரும்புகின்ற எந்தவொரு திட்டத்திற்கும் தமிழக அரசின் ஆதரவு உண்டு. மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு அரசின் ஆதரவு இல்லை. இந்த நிலையில் வன்முறை என்பது எதற்குமே தீர்வாகாது.

வன்முறையால் சாதித்து விடலாம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. மக்களின் போராட்டம் ஜனநாயகத்துக்கு உட்பட்டது என்றால் அதனை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு உள்ளே சென்று கலவரம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால், துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாததாகி விட்டது. துப்பாக்கிச் சூடு தமிழக அரசின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டதா என்பது விசாரணைக்குப் பின் தான் உண்மை நிலை தெரியவரும். தொலைக்காட்சிகளில் இதுகுறித்த செய்தி ஒளிபரப்ப தடை செய்யுமாறு தமிழக அரசு எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இதனை இருட்டடிப்பு செய்ய வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. யார் செய்தாலும் வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. தூத்துக்குடியில் கலவரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ள போது இது பற்றி பேச முடியாது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு. தமிழக அரசின் நிலைப்பாடும், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிலைப்பாடும் ஒன்று தான். எந்த சூழ்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து பின்னர் தெரியவரும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப்படும். துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவம் குறித்து முதல்வர் வருந்தினார். இந்த கலவரம் குறித்த அறிக்கையை அரசு வெளியிடும். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து