முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் லிப்டில் சிக்கிய பெண் ஊழியரால் பரபரப்பு

திங்கட்கிழமை, 28 மே 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஊழியர் ஒருவர் லிப்டில் சிக்கி கொண்டு வெளியில் வரமுடியாமல் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
   ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிட வளாகத்தில் லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை இந்த கட்டிடத்தில் முதல் தளத்தில் உள்ள மதிய உணவு திட்ட அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்க்கும் காளிஜோதி என்பவர் லிப்டில் கீழே இறங்கி வந்துள்ளார். லிப்ட் கீழே வந்ததும் எதிர்பாராதவிதமாக திடீரென்று கதவு இயங்காமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த காளிஜோதி அங்குள்ள பட்டன்களை பலமுறை இயக்க முயன்றும் கதவு திறக்கவில்லை. இதனால் தனது அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அங்கு விரைந்து வந்து பார்த்தபோது லிப்ட்டில் காளிஜோதி சிக்கி வெளியில் வரமுடியாமல் தவிப்பதுதெரியவந்தது.
    இதுபற்றி தகவல் அறிந்த கலெக்டர் முனைவர் நடராஜன் அங்கு விரைந்து வந்து தீயணைப்புத்துறையினருக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்தார். இதனை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் நவீன உபகரணங்கள் உதவியுடன் லிப்ட் கதவினை பிரித்து உள்ளே நின்றிருந்த காளிஜோதியை பத்திரமாக மீட்டனர். வெளியில் வந்த காளிஜோதியிடம் கலெக்டர் நடராஜன் விபரங்களை கேட்டறிந்து ஆறுதல் கூறினார். மின் தடை மற்றும் கதவு இயங்குவதற்கான மின் பகுதி செயல்பாடமல் போனதால் இவ்வாறு நடந்திருப்பது தெரியவந்தது. சுமார் அரைமணி நேர போராட்டத்திற்கு பின்னர் தன்னை பத்திரமாக மீட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு காளிஜோதி நன்றி தெரிவித்தார். பட்டபகலில் கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஊழியர் ஒருவர் லிப்ட்டில் மாட்டிக்கொண்டு வெளியில் வரமுடியாத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து