முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 39.55 சதவீதம் பேர் தேர்ச்சி; மாணவி கீர்த்தனாவுக்கு 12-வது இடம்

திங்கட்கிழமை, 4 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நீட் தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் 2 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சுமார் ஒன்றரை மணிநேரம் முன்னதாகவே 12.30 மணியளவில் வெளியிடப்பட்டன. இதில் அகில இந்திய அளவில் பீகாரை சேர்ந்த கல்பனா குமாரி என்ற மாணவி 720-க்கு 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று 12-ம் இடத்தை பெற்றுள்ளார். இந்த தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 39.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீட் கட்டாயம்

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்பவருகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

90 சதவீதம் பேர் எழுதினர்

அதன்படி, நாடுமுழுவதும் 2018-19 கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு சமீபத்தில் நடந்தது. தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் 136 நகரங்களில் 2,255 மையங்களில் நீட் தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 13 லட்சத்து 26,725 மாணவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் தமிழகத்தில் 10 நகரங்களில் 170 மையங்களில் ஒரு லட்சத்து 7,288 மாணவர்களில், ஒரு லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. தமிழக அரசு மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகளின் உதவியால் மிகுந்த சிரமத்துக்கிடையே ரயில்கள், பேருந்துகளில் சென்று மாணவர்கள் தேர்வு எழுதினர்.

முன்கூட்டியே முடிவுகள்...

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது, கேள்வித்தாள் குழப்பம், விடைத்தாள் திருத்தியதில் விதிமீறல் உள்ளது எனக் கூறி சங்கல்ப் அமைப்பின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க மறுத்து விட்டது. இதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் முன்கூட்டியே 12.30 மணிக்கு நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.

பீகார் மாணவி முதலிடம்

இதில் அகில இந்திய அளவில் பீகாரை சேர்ந்த கல்பனா குமாரி என்ற மாணவி 720-க்கு 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மாணவி கல்பனா குமாரி, இயற்பியலில் 180-க்கு 171 மதிப்பெண்களும், வேதியியலில் 180-க்கு 160 மதிப்பெண்களும் உயிரியலில் 360-க்கு 360 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 13 லட்சத்திற்கும் அதிமான மாணவ, மாணவியர் தேர்வு எழுதிய நிலையில், 7 லட்சம் பேர் வெற்றி பெற்றுள்ளனர். www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

தமிழக மாணவி ...

தமிழகத்தில் 12 லட்சம் மாணவ, மாணவியருக்கும் அதிகமானோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அவர்களில், 1, 14,602 மாணவ, மாணவியர் நீட் தேர்வை எழுதினர். தேர்வு எழுதியவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் 39.55 சதவீதமாக உள்ளது. இந்திய அளவில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 50 பேரில் தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி மட்டுமே இடம் பிடித்துள்ளார். தமிழக மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று 12 -ம் இடம் பிடித்துள்ளார்.

1768 பேர் மட்டுமே...

இதுபோலவே புதுச்சேரியில் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 4573 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 4462 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 1768 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். பொது பிரிவில் 119 மதிப்பெண் வரை தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிரிவில் 118 - 96 மதிப்பெண் பெற்றவர்கள் தகுதி உடைவயர்கள் ஆவர். இதன்படி, பொதுப்பிரிவில் 6,34,897 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பிற்பட்டோர் பிரிவில் 54,653 பேரும், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 17209 பேரும், பழங்குடியினர் பிரிவில் 7446 பேரும் தேர்வாகியுள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து