முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு கையகப்படுத்தப்படும் விவசாய நிலத்திற்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு - முதல்வர் அறிவிப்பு

திங்கட்கிழமை, 11 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

சென்னை : சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு கையகப்படுத்தப்படும் விவசாய நிலத்திற்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். மக்கள் பயன்பாட்டுக்காகத்தான் இந்த திட்டம். தனியாருக்காக அல்ல என்று சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினரின் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டசபையில் சென்னை - சேலம் பசுமை வழி விரைவுச் சாலை திட்டம் மற்றும் திட்டத்திற்கான  எதிர்ப்பு குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
கடந்த 25.2.2018 அன்று, மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை  - சேலம் இடையே பசுமை வழிச்சாலை திட்டம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்திட்டம் 277.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பசுமை வழிச்சாலை 8 வழிச் சாலையாக, சென்னை அருகிலுள்ள தாம்பரம் முதல் சேலம் நகரம் அரியானூர் வரையில், காஞ்சிபுரத்தில் 59.1 கி.மீ., திருவண்ணாமலையில் 123.9 கி.மீ., கிருஷ்ணகிரியில் 2 கி.மீ., தருமபுரியில் 56 கி.மீ., மற்றும் சேலத்தில் 36.3 கி.மீ., என்று இம்மாவட்டங்கள் வழியாக அமைக்கப்பட உள்ளன. இந்த பசுமைவழிப்பாதைக்கு சேலம் முதல் அரூர் வரை NH 179 A என்றும், அரூர் முதல் சென்னை வரை NH 179 B என்றும் எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பயண நேரம் குறைவு

சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களுக்கு செல்வதற்கு தற்போதுள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம், வாலாஜாபேட்டை, வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி வழியாக சுமார் 360 கிலோமீட்டர் அல்லது சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் ஆத்தூர் வழியாக சுமார் 350 கிலோ மீட்டர் பயணித்து சேலம் செல்ல வேண்டும். தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணித்தால் பயண நேரம் சுமார் 5 மணி நேரமாகும். 

தற்போது, இவ்விரு தேசிய நெடுஞ்சாலைகளிலும் இதன் கொள்ளளவை விட 130 சதவிகிதம் மற்றும் 160 சதவிகிதம் அதிகமாக போக்குவரத்து செறிவு உள்ள காரணத்தினால், இச்சாலையில் விபத்துக்கள் மிகவும் அதிகமாக நடைபெறுகின்றன. இன்னும் 10 வருடங்களில், இவ்விரு தேசிய நெடுஞ்சாலைகளிலும், போக்குவரத்தானது 1,50,000 (Passenger Car Unit (PCU)) அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு சாலைகளையும் விரிவுபடுத்தினால், போக்குவரத்து செறிவு 60 ஆயிரம் PCU லிருந்து 1 லட்சம் PCU வரை மட்டுமே அதிகப்படுத்தலாம்.

விபத்துகள் குறையும்

ஆனால், இந்த புதிய எட்டு வழிச்சாலையின் போக்குவரத்து கொள்ளளவு 80,000  போக்குவரத்து செறிவு (PCU) ஆக இருந்தாலும், இச்சாலையானது பசுமை விரைவு நெடுஞ்சாலையாக உள்ளதால், இதன் போக்குவரத்து கொள்ளளவு 1,50,000 போக்குவரத்து செறிவு ஆகும்.  எனவே, தற்போதுள்ள இரண்டு நெடுஞ்சாலைகளின் 1 லட்சம் (PCU)உடன் சேர்த்து 2 லட்சத்து 50 ஆயிரம் (PCU) கொள்ளளவு பயன்பாட்டிற்கு வரும். மேலும், இந்த பசுமைவழி விரைவு சாலையுடன் நேரடியாக பிற குறுக்கு சாலையில் இணைவது முறைப்படுத்தப்பட்டு அணுகுசாலை மூலமாக, அல்லது கீழ்மட்ட பாலங்களின் வழியாக கடப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதால், விபத்துகள் பெருமளவு குறையும்.   அதே நேரத்தில், பெருகிவரும் போக்குவரத்து செறிவையும் தாங்கி பயன் அளிக்கும்.

1900 ஹெக்டேர் நிலம் ...

வருங்காலத்தில் இந்த இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளையும் அகலப்படுத்தினால், ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களும் 15 மீட்டர், அதாவது 30 மீட்டர் அகலத்திற்கு கையகப்படுத்த வேண்டும்.  இதற்கென மொத்தம் சுமார் 2200 ஹெக்டேர் அளவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும்.  அவ்வாறு கையகப்படுத்தும் போது அந்நிலங்களில் சுமார் 40 ஆயிரம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டியிருக்கும். ஆனால்,  இந்த பசுமை விரைவுச்சாலை அமைக்க சுமார் 1900 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படும். பல்லாயிரக்கணக்கான ஹெக்டர் இல்லை, வெறும் 1900 ஹெக்டேர் நிலம் தான் கையகப்படுத்தப்படும். இதில் 400 ஹெக்டேர் நிலம் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகும்.  இப்புதிய சாலையினால், கிட்டதட்ட 300 ஹெக்டேர் நிலம் குறைவாக கையகப்படுத்தப்பட வேண்டும்.

இச்சாலையின் மொத்த நீளமான 277.30 கிலோ மீட்டரில், 9.955 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை மட்டுமே, செங்கல்பட்டு, ஆரணி, போளூர், செங்கம் மற்றும் அரூர் ஆகிய வனப்பகுதியில் செல்கிறது.  அதாவது, கையகப்படுத்த தேவையான 1900 ஹெக்டேரில், 49 ஹெக்டேர் வன நிலம் மட்டுமே அடங்கும்.  இச்சாலை அமைக்க 70 மீட்டர் அகலத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படும்.   இது, வனப்பகுதியில் செல்லும்போது, அதன் அகலம் 45 முதல் 50 மீட்டர்  ஆக குறைக்கப்படும்.

2 மடங்காக காடு வளர்க்கப்படும்

இத்திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், இத்திட்டத்தினால் காடுகளிலுள்ள மரங்கள் அழிக்கப்படும் என்றும், இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும், சேலம் கஞ்சமலை, திருவண்ணாமலை கல்வராயன் மலை ஆகியவற்றிலிருந்து கனிம வளங்கள் சுரண்டப்படும் என்றும், விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்றும் கூறி, சில அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் மற்றும் சில இடதுசாரி அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த பசுமை வழி விரைவுச் சாலையின் நேர்பாடு, குறைவான வனப்பகுதியில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலை அமைப்பதற்கு எடுக்கப்படும் வன நிலத்திற்கு ஈடாக, இரு மடங்கு அரசு புறம்போக்கு  நிலம், மாவட்ட நிர்வாகத்தினரால் நில மாற்றம் செய்து, வனத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 2 மடங்காக காடு வளர்க்கப்படும்.

மலைக்குள் சுரங்கப்பாதை

சென்னை முதல் சேலம் வரையிலான இச்சாலை 10 கிலோமீட்டர் நீளத்திற்கு குறைவாகவே வனப்பகுதியில் செல்கிறது.  அவற்றில், சேலம் புறவழிச்சாலை அமைப்பதற்காக  சுமார் 3.1  கிலோமீட்டர் நீளம் வனப்பகுதியில் இச்சாலை செல்கிறது.  இவ்வனப்பகுதியில் உள்ள மலைக்குள், வனத்திற்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாமல் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது.  மலைக்குள் சுரங்கப்பாதையாக அமைப்பது வனத்தை பாதுகாக்கும் சிறந்த முறையாக உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். மேலும், இந்த விரைவுச் சாலையானது சரணாலயம், தேசிய பூங்கா, பாதுகாக்கப்பட்ட பகுதியிலிருந்து 10  கிலோமீட்டர் தொலைவாகவே அமைக்கப்படுகிறது.  எனவே வன விலங்குகளுக்கும் எவ்வித இடையூறோ, பாதிப்போ ஏற்படாத வண்ணம் இந்த பசுமைவழி விரைவுச் சாலை அமைக்கப்பட உள்ளது.

தி.மு.க. ஆட்சியை விட ...

இந்த பசுமைவழி வரைவுச் சாலை அமைப்பதினால், குறைவான மரங்களே வெட்டப்பட உள்ளன. ஏனினும், இந்த விரைவுச் சாலை இருமருங்கிலும் சுமார் 10 மீட்டர் அகலத்திற்கு சுமார் 3 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் தேசிய நெடுஞ்சாலை சட்டம் 1956ன் படி கையகப்படுத்தப்படும்.  அதுமட்டுமல்லாமல் புதிய நில எடுப்பு சட்டத்தின்படியும் அந்த நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இச்சட்டத்தின்படி அடிப்படை சந்தை மதிப்பில் நகர்புறங்களில் குறைந்தபட்சம் இரண்டு மடங்கும், கிராமபுறங்களில் குறைந்தபட்சம்  இரண்டரை மடங்கிலிருந்து 4 மடங்கு வரை இழப்பீடாக வழங்கப்படும். கையகப்படுத்தப்படும் நிலத்திலுள்ள மரங்கள், கட்டிடங்கள் மற்றும் கிணறு ஆகியவற்றிற்கும் தனியே உரிய இழப்பீடு வழங்கப்படும். மேலும், கட்டடங்களுக்கு தேய்மான மதிப்பு ஏதும் கணக்கிடப் படாமல் தனியே இழப்பீடு வழங்கப்படும். மத்திய அரசின் தங்க நாற்கர சாலை மற்றும் வடக்கு தெற்கு சாலை திட்டத்தின்படி வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையுடன் ஒப்பிடுகையில் தற்போதுள்ள இழப்பீடு சுமார் நான்கு மடங்கு அதிகமாகும்.

ரூ.20 லட்சம் இழப்பீடு...

திராவிட முன்னேற்றக் கழகம் மத்தியிலே ஆட்சியிலே இடம் பெற்றிருந்தது. அப்போது மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக டி.ஆர். பாலு இருந்தார். அப்பொழுது கொடுக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையைவிட இப்பொழுது கூடுதலாக இழப்பீட்டுத் தொகை அந்த நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும். உதாரணமாக, 2007-2008-ம் ஆண்டு சேலம் நகரத்திற்கு அருகில் உள்ள அயோதிபட்டணத்திற்கு நான்குவழி சாலை நிலம் எடுக்கும் போது, ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை அப்பொழுது 8 லட்சம் ரூபாய். ஆனால் தற்போது குறைந்தபட்சம் 20 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதே பகுதியில் உள்ள கான்கிரீட் தள வீடுகளுக்கு இழப்பீட்டுத் தொகை அன்று சதுரடிக்கு 100 ரூபாய் வழங்கப்பட்டது. இன்று சதுர அடிக்கு 340 ரூபாய் வழங்கப்படுகிறது.  ஓட்டு வீடுகளுக்கு அன்று சதுர அடிக்கு 60 ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது, இன்றைக்கு ஓட்டு வீடுகளுக்கு சதுர அடிக்கு 200 ரூபாய் வழங்கப்படுகிறது. தென்னை மரம் ஒன்றிற்கு அன்றைக்கு வழங்கப்பட்ட தொகை 12,000 ரூபாய். இன்றைக்கு 40,000 ரூபாய் ஒரு தென்னை மரத்திற்கு வழங்கப்படுகிறது.

ரூ.700 கோடி சேமிப்பு

இந்த பசுமைவழி விரைவு சாலையினால், தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்கள், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களின் பயண தூரம், சுமார் 60 கிலோ மீட்டர் வரை குறையும்.   இதனால், சென்னை முதல் சேலம் வரையிலான பயண நேரம் சுமார் இரண்டு மணி நேரம், 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆக, இவ்விரைவுச் சாலையினால் பயண நேரம் பாதியாகக் குறையும். மேலும், இந்த குறைவான பயண தூரத்தினால், டீசல் சேமிப்பு ஒரு வருடத்திற்கு சுமார் 700 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பிற்கும், தொழில் வளர்ச்சிக்கும் தரமான சாலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், இந்த பசுமைவழி விரைவுச் சாலையினால் தமிழ்நாட்டில் தொழில் முன்னேற்றம் அடைவது மட்டுமின்றி, வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)உயரும். தொழில் வளர்ச்சிக்கு மிகவும் பயன்படும் கனரக வாகன போக்குவரத்து குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்றடையும். மேலும், கனரக வாகன நடை எண்ணிக்கை அதிகரிக்கும். இது தொழில் வளர்ச்சிக்கு மிகப் பயனுள்ளதாக அமையும்.

ஒலி மாசு குறையும்

மும்பை-புனே விரைவுச் சாலையினால் பிம்பிரி - சின்சவத் பகுதி தொழில் துறையில் முன்னேறி உள்ளது.  இதே போல் டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையினால் கிரேட்டர் நொய்டா பகுதியும் தொழில் துறையில் முன்னேறி உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் மேற்கு மண்டலம், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் இந்த பசுமைவழி விரைவுச் சாலையில் செல்வதனால், தற்போதுள்ள சென்னை-பெங்களூரூ மற்றும் சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைவதோடு மட்டுமின்றி, விபத்துகளும் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.  இவ்விரு தேசிய நெடுஞ்சாலைகளிலும் காற்று மாசுபடுவது மற்றும் ஒலி மாசுபடுவது வெகுவாக குறையும்.

தொழில் வளர்ச்சிக்கு வாய்ப்பு

அது மட்டுமல்லாமல், இந்த பசுமைவழி விரைவுச் சாலையினால், தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய திருவண்ணாமலை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, செங்கம், அரூர் மற்றும் பல வட்டங்களில், தொழில் வளர்ச்சி அடைய, நிறைய வாய்ப்புகள் ஏற்படும்.  இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக சென்னை கிண்டியில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினால் அலுவலகம் அமைக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தேவையான நிலங்கள் அளவீடு பணிகள் செய்யப்பட்டு, கையகப்படுத்தும் பணியும், சம்மந்தப்பட்ட மற்ற துறைகளிடமிருந்து அனுமதி பெறும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பசுமைவழி விரைவுச் சாலை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.  இந்நிறுவனம், சாலை அமைப்பதற்கு தேவையான நிலங்களை அளக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 

அதிகாரிகளுக்கு உத்தரவு...

2.5.2018 அன்று சேலம் மாவட்டத்தில் உத்தமசோழபுரம் என்ற இடத்தில் நிலங்களை அளப்பதை சிலர் தடுத்ததினால், காவல்துறை அலுவலர்கள்,  அந்த இடத்திற்கு உடன் சென்று, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தவிர்த்தனர்.  திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி மாவட்டங்களிலும், நிலங்களை அளப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  1.5.2018 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்த பசுமைவழி விரைவுச் சாலை பற்றி தேவையற்ற சந்தேகங்களைப் போக்கவும், சரியான விவரங்களை பொதுமக்களுக்கு கொடுக்கவும் நான் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பாதிப்பு குறைவு - பயன்கள் அதிகம்

தற்போது இருக்கின்ற இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தும்போது கையகப்படுத்தப்படும் நிலங்களில் சுமார் 400 ஹெக்டேர் நிலம் அரசு புறம்போக்கு நிலங்கள் என்பதாலும், மிக குறைவான எண்ணிக்கையிலேயே வீடுகள், கட்டிடங்கள் மட்டுமே பாதிக்கப்படும் என்பதாலும், இந்த பசுமைவழி விரைவுச் சாலை நேர்பாட்டில் முக்கிய நகரங்கள் ஏதும் இல்லை என்பதாலும், விபத்துக்களை குறைத்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் திட்டம் என்பதாலும், பெருகி வரும் வாகன போக்குவரத்திற்கு தேவையான கொள்ளளவை இத்திட்டம் நிவர்த்தி செய்யும் என்பதாலும், நில உடைமைதாரர்களுக்கு போதுமான அளவு இழப்பீடு, அதாவது தங்க நாற்கர வழி சாலை திட்டத்தின் போது வழங்கப்பட்ட இழப்பீட்டை விட, குறைந்தபட்சம் இரண்டரை மடங்கிலிருந்து அதிகபட்சம் நான்கு மடங்கு வரை அதிக இழப்பீடு  புதிய நில எடுப்பு சட்டத்தின்படி கிடைக்கும் என்பதாலும், இந்த பசுமைவழி விரைவுச் சாலை கடந்து செல்லும் பின்தங்கிய பகுதியில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதாலும், இந்த பசுமைவழி விரைவுச் சாலையானது தடுப்புச் சுவருடன் கூடிய தடங்கல் அற்ற 8 வழிச்சாலையாக அமைவதால், விபத்துகள் வெகுவாக குறைந்து, விலைமதிப்பில்லாத மனித உயிர் காக்கப்படும் என்பதாலும், தற்போதுள்ள சென்னை-பெங்களூரு மற்றும் சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துவதை போல, பசுமைவழி விரைவுச் சாலை திட்டதினால் பாதிப்புகள் மிகவும் குறைவாகவும், பயன்கள் அதிகமாகவும் இருப்பதால், இத்திட்டத்தினை செயல்படுத்துவது அவசியமாகும். 

ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட தங்க நாற்கர சாலை மற்றும் வடக்கு தெற்கு வழித்தடம் அமைக்கும் பொழுது, கிருஷ்ணகிரி-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் வனப் பகுதியிலும் மற்றும் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பேரண்டபள்ளி வனப் பகுதியிலும் மற்றும் திருநெல்வேலி – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வல்லநாடு வனப் பகுதியிலும் சாலை அமைக்கப்பட்டது. இந்த திட்டங்கள் அனைத்தும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசினால் திட்டமிடப்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசினால் செயல்படுத்தப்பட்டது.

ஸ்டாலினுக்கு பதிலடி

சேலத்தில் நான் இருப்பதினால், தேவையில்லாத குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள். அதை நான் முழுமையாக விளக்கியாக வேண்டும். ஆகவே, எதிர்க்கட்சித் தலைவர் நிறைய நிலம் எடுப்பதாக சொன்னார். அப்பொழுது, உங்களுடைய கட்சியை சேர்ந்தவர் மத்தியிலே அமைச்சராக இருந்த போது, கிட்டத்தட்ட 17 தேசிய நெடுஞ்சாலைகள் எடுக்கப்பட்டன. அதை நான் தவறாக சொல்லவில்லை. ஆகவே, இதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஏதோ, அம்மாவுடைய அரசு கொண்டு வந்த சாலையிலே அதிக நிலத்தை எடுப்பதாகவும், நிறைய பேர் பாதிக்கப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டை சொல்லுகிறீர்கள், அது தவறு.

கோட்டை விட்ட தி.மு.க.

இந்த திட்டம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத்தானே தவிர, தனியாருக்கானது அல்ல. உங்கள் ஆட்சியில் நீங்கள் சாலைகள் அமைத்தீர்கள். அது தனியாருக்காகவா அமைத்தீர்கள்?. நீங்கள் கோட்டை விட்டதை நாங்கள் மத்திய அரசிடம் போராடி பெற்றிருக்கிறோம். நீங்கள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தீர்கள். அப்படி இருந்தும் இந்த திட்டத்தை கோட்டை விட்டீர்கள். எனவே இந்த திட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம். எனவே, பொதுமக்களும், அமைப்புகளும் உண்மை நிலையினை அறிந்து, எதிர்ப்பினை கைவிட்டு, திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.

வனவிலங்குகளுக்கு பாதிப்பு இருக்காது

இத்திட்டத்தினால்காடுகளிலுள்ள மரங்கள் அழிக்கப்படும் என்றும், இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புஏற்படும் என்றும், சேலம் கஞ்சமலை, திருவண்ணாமலை கல்வராயன் மலை ஆகியவற்றிலிருந்து கனிம வளங்கள் சுரண்டப்படும் என்றும், விளைநிலங்கள்பாதிக்கப்படும் என்றும் கூறி, சில அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் மற்றும்சில இடதுசாரி அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த பசுமை வழி விரைவுச் சாலையின் நேர்பாடு, குறைவான வனப்பகுதியில்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாலை அமைப்பதற்கு எடுக்கப்படும்வன நிலத்திற்கு ஈடாக, இரு மடங்கு அரசு புறம்போக்கு நிலம், மாவட்டநிர்வாகத்தினரால் நில மாற்றம் செய்து, வனத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 2 மடங்காக காடு வளர்க்கப்படும். சென்னை முதல் சேலம் வரையிலான இச்சாலை 10 கிலோமீட்டர் நீளத்திற்கு குறைவாகவே வனப்பகுதியில் செல்கிறது. அவற்றில், சேலம் புறவழிச்சாலை அமைப்பதற்காக சுமார் 3.1 கிலோமீட்டர் நீளம் வனப்பகுதியில் இச்சாலை செல்கிறது. இவ்வனப்பகுதியில் உள்ள மலைக்குள், வனத்திற்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாமல் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து